The Water Board will take over the project from the World Bank to prevent sewage from entering the lakes | ஏரிகளில் கழிவுநீர் கலக்காமல் தடுக்க திட்டம் உலக வங்கியிடம் கையேந்தும் குடிநீர் வாரியம்

பெங்களூரு, : பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட, 19 ஏரிகளில் சாக்கடை நீர் கலப்பதை கட்டுப்படுத்த, உலக வங்கியின் உதவியுடன் திட்டம் செயல்படுத்த, குடிநீர் வடிகால் வாரியம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, பெங்களூரு குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி, ஏரிகளில் கழிவுநீர் கலக்காமல் தடுக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 38 கிராமங்கள் மற்றும் இவற்றின் எல்லையில் உள்ள 30 புதிய லே அவுட்களில் இருந்து, லட்சக்கணக்கான லிட்டர் கழிவுநீர், நேரடியாக ஏரிகளில் கலக்கிறது.

இதைத் தடுத்து சுத்திகரிக்கப்பட்ட நீரை, ஏரியில் பாய்ச்ச ஒன்பது கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்படுகின்றன.

ஏரிகள், கால்வாய்களில் சுத்திகரிக்கப்பட்ட நீரை மட்டுமே பாய்ச்ச, திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஏரிகள் அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க இட வசதியில்லாத பகுதிகளில், பம்பிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்படும்.

அங்கிருந்து கழிவுநீர், சுத்திகரிப்பு மையத்துக்கு பம்பிங் செய்யப்படும். இந்த திட்டத்துக்கு 1,000 கோடி ரூபாய் தேவைப்படும்.

உலக வங்கியிடம் உதவி கோரப்பட்டுள்ளது. இதற்கு குடிநீர் வாரிய நிர்வாகத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளது. நிதித்துறையின் ஒப்புதல் கிடைத்தவுடன், டெண்டர் அழைக்கப்படும்.

முதற்கட்டமாக 38 கிராமங்களுக்கு உட்பட்ட, பகுதிகளின் கழிவுநீரை சுத்திகரித்து, ஏரியில் பாய்ச்ச திட்டமிட்டுள்ளோம். வரும் நாட்களில் 110 கிராமங்களில் இத்தகைய திட்டம் செயல்படுத்தப்படும்.

நகரின் ஏரிகளுக்கு கழிவுநீர் கலப்பதால் ஏற்படும், பல ஆண்டுகள் பிரச்னைக்கு கட்டம், கட்டமாக தீர்வு கிடைக்கும். வரும் நாட்களில் எந்த ஏரிகளிலும், கழிவுநீர் கலக்காது. சுத்திகரிக்கப்பட்ட நீர் மட்டுமே, ஏரியில் பாயும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.