சுதந்திரத்திற்கு முந்தைய பிரிட்டிஷ் காலனி ஆதிக்க இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு பழங்குடி இனக்குழுவைச் சேர்ந்த அனலீசன் (தனுஷ்), மன்னர்கள் மற்றும் ஆதிக்க சாதியினரின் ஒடுக்குமுறைகளாலும் பிரிட்டிஷாரின் அடக்குமுறைகளாலும் பாதிக்கப்படுகிறார். இந்த சாமானிய இளைஞன், அவ்வொடுக்குமுறைகளுக்கு எதிராக எப்படிக் கிளர்ந்தெழுந்து `கேப்டன் மில்லராக’ உருவெடுக்கிறான் என்பதைப் பேசுகிறது அருண் மாதேஸ்வரனின் `கேப்டன் மில்லர்’.
அனலீசனிலிருந்து கேப்டன் மில்லராகப் பரிணமிக்கும் ஒரு போராளியின் பயணத்திற்கு உயிர்கொடுத்திருக்கிறார் தனுஷ். இந்தப் பயணத்தைத் தோற்றத்தில் மட்டுமல்லாது, மனதளவில் ஏற்படும் மாற்றங்களையும் முதிர்ச்சியையும் உணர்வுபூர்வமான நடிப்பால் கண்முன் கொண்டுவந்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் சபாஷ் வாங்குகிறார். அழுத்தமான போராளி கதாபாத்திரத்தை முடிந்தளவு குறையேதுமில்லாமல் கரை சேர்த்திருக்கிறார் பிரியங்கா மோகன். ஆனால், கணவரைக் கொன்றவனைச் சந்திக்கும்போது வெளிப்பட்டிருக்க வேண்டிய கோபம் சுத்தமாக மிஸ்ஸிங்! இளங்கோ குமரவேலும், காளி வெங்கட்டும் தங்கள் கதாபாத்திரங்களின் தன்மையை உணர்ந்து, அதற்கேற்ற கச்சிதமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் ஆகியோரின் பங்களிப்பு மாஸ் மீட்டரை எகிற வைத்திருக்கிறது. அப்துல் லீயின் பாத்திரமும் குற்றவுணர்ச்சியை வெளிப்படுத்தும் அவரின் அந்த ஆழமான நடிப்பும் பாராட்டத்தக்கது. வில்லன்களாக ஜெய பிரகாஷ், ஜான் கொக்கன் ஆகியோர் தேவையான மிரட்டலையும் வஞ்சகத்தையும் கடத்தியிருக்கிறார்கள். ஜான் கொக்கன் மட்டும் சில இடங்களில் மிகை நடிப்பை அள்ளி வீசியிருக்கிறார். விஜி சந்திரசேகர், அருணோதயன், நிவேதிதா சதீஷ், வினோத் கிஷன் ஆகிய துணை கதாபாத்திரங்களின் நடிப்பில் குறையேதுமில்லை.
தன் கேமரா கோணங்களாலும் நகர்வுகளாலும் ஆக்ஷன் காட்சிகள், சேஸிங் காட்சிகளில் தன் பெயரை அழுத்தமாகப் பதிக்கிறார் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி. வெட்கையும் ரத்தமும் கலந்து ஓடும் நிலத்தை நேர்த்தியாகத் திரையில் கொண்டுவந்திருக்கிறார். நாகூரான் ராமச்சந்திரனின் படத்தொகுப்பு தொடக்கக் காட்சிகளின் பிரத்யேக கதை சொல்லலுக்கும், இரண்டாம் பாதியின் ஆக்ஷன் காட்சிகளுக்கும் கைகொடுத்திருக்கிறது. சேஸிங் காட்சிகள், பிரமாண்ட போர் வடிவமைப்பில் வரும் ஆக்ஷன் காட்சிகள் போன்றவற்றில் கவனிக்க வைக்கிறார் திலீப் சுப்பராயன்.
படத்தின் இரண்டாவது கதாநாயகனாக ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை. உணர்ச்சிகளைக் கடத்த முடிந்த அளவிற்கு மேற்கத்திய இசையைக் குறைத்து, நாட்டுப்புற இசைக்கருவிகளை அட்டகாசமாகப் பயன்படுத்தியிருக்கிறார். `கில்லர் கில்லர்’ பாடலும் அதன் மேக்கிங்கும் விசில் சத்தத்திற்கு உத்தரவாதம் அளிக்கின்றன. ஆங்காங்கே வந்து போகும் மற்ற பாடல்கள் கதையோட்டத்துக்குத் தடையாக இருந்தாலும் ரசிக்க வைக்கின்றன.

சமவெளியில் வாழும் பழங்குடி கிராமம், பழங்கால சிவன் கோயில், அக்கால போராளிகளின் ஆயுதங்கள், பிரிட்டிஷின் ராணுவ ஆயுதங்கள், இரு சக்கர வாகனங்கள் என கலை இயக்குநர் த.ராமலிங்கத்தின் உழைப்பு காட்சிக்குக் காட்சி தெரிகிறது. பூர்ணிமா ராமசாமி மற்றும் காவ்யா ஶ்ரீராமின் ஆடை வடிவமைப்பும், பாஸ்கரின் நடன இயக்கமும் கவனிக்க வைக்கின்றன. ஒட்டுமொத்தமாக மொத்தத் தொழிற்நுட்பக் குழுவும் ஒரு தேர்ந்த திரையனுபத்தைத் தந்திருக்கின்றன.
‘ராவணனின் வழித்தோன்றலான கோரனார்’ என்ற சிறு தெய்வம் மற்றும் அதோடு தொடர்புடைய வாய்வழி கதை படத்துக்குச் சுவாரஸ்யம் சேர்க்கிறது. கேப்டன் மில்லரின் வருகை, அவரின் பின்கதை, சாதியாதிக்கத்தால் ஒடுக்கப்படும் பழங்குடி மக்கள் போன்றவற்றை இயக்குநரின் பிரத்யேக ஸ்டைலிலும், நிதானமாகவும் நகர்த்துகிறது முதற்பாதி திரைக்கதை.
அனலீசன் என்ற இளைஞனின் கோபம், கேள்வி, அதைத் தொடர்ந்து எடுக்கும் முடிவுகள், தவறுகள், அவை தரும் குற்றவுணர்வுகள் என அக்கதாபாத்திரத்தின் அக மாற்றத்தைக் கச்சிதமான காட்சிகளால் கடத்தியிருக்கிறது திரைக்கதை. மறுபுறம், கோயிலைக் கட்டிய மக்களையே அக்கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுப்பதோடு அம்மக்களை அடிமைப்படுத்தி வைக்கும் சாதிய சமூகம், தங்கள் ஆயுதங்களாலும் அதிகாரத்தாலும் மக்களைக் கொல்லும் பிரிட்டிஷார், இவர்களுக்கு இடையிலான உறவு, ஒற்றுமை என சமூக ரீதியிலான புறச்சூழலையும் ஆழமாகவும் பிரசார நெடியில்லாமலும் பதிவு செய்திருக்கிறது படம். இதற்கு மதன் கார்க்கியின் வசனங்கள் கைகொடுத்திருக்கின்றன. ஆனால், கதையின் நிலவியல் குறித்த விவரங்கள் இன்னும் ஆழமாகவும் தெளிவாகவும் சொல்லப்பட்டிருந்தால் படம் பேசும் அரசியல் இன்னும் வலுவடைந்திருக்கும்.
கதாநாயகனுக்கான மாஸ் காட்சிகள், சர்ப்ரைஸான ஆக்ஷன் செட்பீஸ்கள், திரையை நனைக்கும் ரத்தம் சொட்டும் வன்முறை, அதிரடியான பின்னணி இசை என முழுக்க ஆக்ஷன் களத்தில் களமாடினாலும் சுவாரஸ்யமாகவே நகர்கிறது இரண்டாம் பாதி திரைக்கதை. உணர்வுபூர்வமான காட்சிகளும் இருக்கின்றன என்றாலும், அதிகப்படியான ஆக்ஷன் காட்சிகளுக்கு இடையில் அவை சிக்கித் தவிக்கின்றன. அதனாலேயே அதன் வீரியத்தை முழுதாக உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை.
முதற்பாதியில் பிரச்னைகளை சமூக ரீதியாக நேர்மையாகவும் ஆழமாகவும் அணுகிக்கொண்டிருந்த திரைக்கதை, இரண்டாம் பாதியில் தனிமனித ஆக்ஷன் ஆட்டமாக மாறுவது சிறிது ஏமாற்றம் அளிக்கிறது. இறுதிப்பகுதி ட்விஸ்ட்டுகள் எளிதிலேயே யூகிக்கக் கூடிய வகையில் இருப்பதாலும், அவை வலிந்து திணிக்கப்பட்டவை போல இருப்பதாலும், க்ளைமாக்ஸ் சிறிது நாடகத்தனமாக மாறிவிடுகிறது.
சுதந்திரப் போராட்ட காலத்தில் பெரிய பெரிய அமைப்புகள் தவிர்த்து, ஆங்காங்கே கிளர்ந்தெழுந்த சிறுசிறு போராளி இயக்கங்களைப் பற்றியும், அவற்றோடு தொடர்புடைய கலை மற்றும் பண்பாட்டுத் துணையமைப்புகளையும், சுதந்திரப் போராட்டத்தில் அவை ஏற்படுத்திய தாக்கத்தையும் படம் முழுவதும் துருத்தல் இன்றி காட்சிப்படுத்திய விதத்தில் குறைகள் மறந்து கவனிக்க வைக்கிறார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்.

கில்லரான மேக்கிங்கிற்காகவும், தனுஷின் நடிப்புக்காகவும் இந்த `கேப்டன் மில்லர்’க்கு ஒரு சல்யூட் அடிக்கலாம்!