கோலாலம்பூர்,
மலேசிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி – சிராக் ஷெட்டி ஜோடி, உலக தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் தென் கொரியாவின் காங் மின் ஹியுக் – சியோ சியுங் ஜே ஜோடியுடன் மோதியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாத்விக் – சிராக் ஷெட்டி ஜோடி, 21-18, 22-20 என்ற செட் கணக்கில் காங் – சியோ ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. மலேசிய ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய ஜோடி சாத்விக் – சிராக் ஷெட்டி ஜோடியாகும்.