தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘ராயன்’ திரைப்படம் திரையரங்குகளில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியது.
இப்படத்தில் இடம்பெற்ற ‘அடங்காத அசுரன்’ பாடலின் இடையே ரஹ்மானின் மயக்கும் குரலில் வரும் ‘உசுரே நீதானே…நீ தானே ‘ வரிகள் உலகம் முழுவதும் ட்ரெண்டாகி, அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்தப் பாடல் வரிக்கு திரையரங்குகளில் விசில் பறக்கவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் ஏ.ஆர்.ரஹ்மான் மலேசியாவில் நடத்தும் இசைக் கச்சேரியில் ரஹ்மான் பாடிய ‘பம்பாய்’, ‘இந்தியன்’ திரைப்படங்களில் பாடல்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும், ரஹ்மானின் இண்டர்லூட்களும், பின்னணி இசைக் கோர்வையும் இசைக்கப்பட்டு ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்து வருகிறது. அதில், ‘ராயன்’ படத்தின் ‘உசுரே நீதானே…’ பாடலும் இடம்பெற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதுதொடர்பான காணொலிகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக இதைப் பகிர்ந்துள்ள நடிகர் தனுஷ், “நான், ‘உசுரே நீதானே.. நீ தானே’ என்ற இரண்டு வார்த்தைகளை எழுதும்போது அது இந்த அளவிற்கு ஒரு ஐகானிக் வரிகளாக மாறும் என நினைத்துப் பார்க்கவில்லை. உங்களது மெல்லிசையாலும், குரலாலும் அது மில்லியன் கணக்கான இதயங்களை வென்று ஒரு ஐகானிக் பாடலாகிவிட்டது. உண்மையில் இது மெய் சிலிர்க்க வைக்கிறது ரஹ்மான் சார்…” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
I never imagined when I wrote these two simple words ” usure needhane ” in your magical melody that it would resonate with millions and become iconic. Wow, this is pure goosebumps moment @arrahman sir ♥️ pic.twitter.com/g6TqcE4Wlu
— Dhanush (@dhanushkraja) July 29, 2024
தனுஷின் இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் நெட்டிசன்கள் பலரும், `1992 ம் ஆண்டு ‘ரோஜா’வில் ஆரம்பித்து இன்று ‘ராயன்’ வரை ரஹ்மான் தனது மேஜிக்கால் மெல்சிலிர்க்க வைத்துக் கொண்டே இருக்கிறார்’ என்று கமென்ட் செய்து வருகின்றனர்.