புதுச்சேரி: திருட்டு வழக்கில் பெண் மீதான விசாரணை விவகாரப் புகார்கள் மற்றும் போராட்டத்தால் பெண் எஸ்ஐ உட்பட 3 போலீஸார் ஆயுதப்படைக்கு இன்று மாற்றப்பட்டனர்.
தவளக்குப்பம் பகுதி பூர்ணாங்குப்பத்தைச் சேர்ந்தவர் அர்ஜூன். இவரது மனைவி கலையரசி. அப்பகுதி தனியார் விடுதியில் சில ஆண்டுகளாக பணிபுரிந்துவருகிறார். சில நாட்களுக்கு முன்பு விடுதியில் தங்கியிருந்தவர் மோதிரம் காணவில்லை என கூறப்படுகிறது. அதுகுறித்து தவளக்குப்பம் போலீஸார் கலையரசியிடம் விசாரித்துள்ளனர். அப்போது கலையரசியை விதிமுறைக்கு மாறாக தாக்கியதால் மனைவி மீது காவல் நிலையத்தில் தாக்குதல் நடந்ததை அர்ஜுனன் தட்டிக்கேட்டுள்ளார்.
ஆனால், அவரை காவல் நிலையத்தில் அவமானப்படுத்தியதால் தற்கொலைக்கு முயன்று உயிரிழந்துள்ளார். இதையடுத்து விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சித்திரவதை செய்த சம்பவத்தில் தொழிலாளி அர்ஜுனன் உயிரிழப்புக்கு காரணமான காவல் நிலைய அதிகாரிகள், காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்த கோரி, சிபிஎம், சி பிஐ, சிபிஐ எம். எல், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தவளக்குப்பம் காவல்நிலையத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் தலைமையக எஸ்பி சுபம் கோஷ் இன்று பிறப்பித்த உத்தரவில் தவளக்குப்பம் எஸ்ஐ சண்முகசத்யா, சிறப்பு நிலை ஏஎஸ்ஐ சுரேஷ், காவலர் வசந்தராஜா ஆகியோர்ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.