‘அதிகார வரம்பை மீறுகிறீர்கள் ட்ரம்ப்’ – இறக்குமதி வரிக்கு தடை விதித்த அமெரிக்க நீதிமன்றம் சாடல்

டொனால்டு ட்ரம்ப் விதித்த இறக்குமதி வரிகளுக்கு தடை விதித்துள்ளது நியூயார்க்கில் உள்ள சர்வதேச வர்த்தக நீதிமன்றம், மேலும், அதிபருக்கு உள்ள சட்டத்துக்கு உட்பட்ட அதிகார வரம்புகளை மீறி ட்ரம்ப் செயல்படுவதாகவும் கோர்ட் அவரைக் கடிந்துள்ளது.

அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜன.20-ம் தேதி 2-வது முறையாக அதிபராக பதவியேற்றார். அதிபர் பதவியேற்ற பிறகு அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் முதல் முறையாக உரையாற்றுகையில், “அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா 100 சதவீத வரி விதிக்கிறது. இதேபோல் மற்ற நாடுகளும் அதிக வரி விதிக்கின்றன. இது நியாயமற்றது. ஆட்டோமொபைல் பொருட்களுக்கு 100 சதவீதத்துக்கும் அதிகமாகவே இந்தியா வரி விதிக்கிறது. ஐரோப்பிய யூனியன், இந்தியா, சீனா, பிரேசில், மெக்சிகோ, கனடா போன்ற நாடுகள், நாம் விதிக்கும் வரியை விட அதிக வரிகளை விதிக்கின்றன. அதை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எனவே, மற்ற நாடுகள் எவ்வளவு வரி விதிக்கின்றனவோ, அதே அளவுக்கு அமெரிக்காவும் வரி விதிக்கும்.” என்றார்.

அதன்படி ஒவ்வொரு நாட்டுக்கும் எவ்வளவு வரி என்ற பட்டியலையும் வெளியிட்டார். இதில் இந்தியாவுக்கு 27% வரி விதிக்கப்பட்டது. சீனாவுடனான வரி யுத்தம் மட்டும் நீண்டு கொண்டே சென்றது. ட்ரம்ப்பின் புதிய வரி விதிப்பு கொள்கையால் உலகளவில் நிச்​சயமற்ற தன்மை ஏற்பட்டது. இந்நிலையில் சீனாவைத் தவிர பிற உலக நாடுகளுக்கு இறக்குமதி வரி சராசரியாக 10 சதவீத அடிப்படை வரி மட்டும் வசூலிக்கப்படும் என்று ட்ரம்ப் அறிவித்தார்.

இந்நிலையில் ட்ரம்ப் வரியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு யுஎஸ் ஃபெடரல் வர்த்தக நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம், ட்ரம்ப் வரி விதிப்புக்கு தடை விதித்தது. அரசுத் தரப்பில், “ட்ரம்ப்பின் இந்த வரி விதிப்பு தான் அண்மையில் இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டுவர உதவியது. அந்த இருநாடுகளுக்கும் அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் சலுகைகள் வழங்கியே முழு வீச்சுப் போராக வேண்டியிருந்ததை தடுத்து நிறுத்தினோம்.” என்று வாதிடப்பட்டது. ஆனால் இந்த வாதத்தை அமெரிக்க நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும், அதிபருக்கு உள்ள சட்டத்துக்கு உட்பட்ட அதிகார வரம்புகளை மீறி ட்ரம்ப் செயல்படுவதாகவும் கோர்ட் அவரைக் கடிந்துள்ளது.

அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை ரத்து செய்யும் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் உத்தரவுக்கு அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் தடை விதித்தது. ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கு பல்வேறு கெடுபிடிகளை விதித்த ட்ரம்ப் உத்தரவுக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இறக்குமதி வரி விவகாரத்திலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.