தாம்பரம்: “டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் என்ன கேள்வி வேண்டும் என்றாலும் கேட்கலாம். ஆனால், அது தேசப்பற்று உணர்வோடு இருக்க வேண்டும்,” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தாம்பரம் அடுத்த ராஜகீழ்பாக்கம் ஏரியில் பாஜக சார்பில் தூய்மைப்படுத்துதல் மற்றும் மரக்கன்று நடுதல் நிகழ்ச்சி இன்று (ஜூன் 5) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பார்வையாளர் அரவிந்த் மேனன், மாநில செயலாளர் வினோஜ்.பி.செல்வம் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் ரகுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு எரிக்கரை பகுதியில் தூய்மைப்படுத்தி, மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உறுதிமொழி ஏற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் கூறியது: “சுற்றுச்சூழல் என்பது மனிதனுக்கு மிக முக்கியமானது. அந்தக் காலங்களில் சுற்றுச்சூழல் மிக அமைதியாக இருந்தது. எல்லா மனிதர்களும் தனிமனித ஆயுள் என்பது நூறாண்டு காலம் இருந்தது. இன்று மனிதனுடைய ஆயுள் காலம் குறைந்துள்ளது. அதற்கு காரணம் சுற்றுச்சூழல் தான். ஆகவே, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தனி மனிதனின் கடமையாகும். எல்லோரும் மரம் நட வேண்டும். இறக்கும் மரங்களை பாதுகாக்க வேண்டும். வயல்களில் ஆர்கானிக் உரம் இடவேண்டும்.
கெமிக்கல் உரங்களை தவிர்க்க வேண்டும். இப்படி அனைத்து வகையிலும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். பிரதமர் நரேந்திர மோடி வந்த பிறகு விவசாயிகளுக்கான ஆர்கானிக் உரம் போடுவதற்கு ஸ்வச் பாரத் என்கிற திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். அனைவரும் வீட்டையும் நாட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.
நமது ஆட்சியாளர்கள் அவர்களுடைய உள்ளங்களையும் சுத்தமாக வைத்துக்கொண்டு தமிழக மக்களுக்கு இன்னும் ஓராண்டு காலம் அவர்களின் பணி இருக்கிறது. அதுவரை நல்லாட்சி தர வேண்டும். என கேட்டுக்கொள்கிறேன். ஸ்வச் பாரத் திட்டம் உள்பட தமிழ்நாட்டில், மத்திய அரசு எந்த திட்டங்கள் கொண்டு வந்தாலும் அதற்கு எதிராக தான் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்.
டி.ஆர். பாலு நாடாளுமன்றத்தில், என்ன கேள்வி வேண்டும் என்றாலும் கேட்கலாம். ஆனால், அது தேசப்பற்று உணர்வோடு இருக்க வேண்டும். டி.ஆர். பாலு தீவிரவாதிகள் மீது நடத்திய தாக்குதலை வரவேற்று இருப்பது நல்ல விஷயம் தான். இந்தியாவுக்கு ஏற்பட்ட பாதிப்பு என்னவென்று அவர் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் அல்லவா அதுவே பெரிய பாதிப்புதான். அதையெல்லாம் டி.ஆர்.பாலு தெரிந்து கொள்ள வேண்டும். பொறுத்திருந்து பாருங்கள்” என்று அவர் கூறினார்.
முன்னதாக, “மக்களின் வரிப் பணத்தில் ராணுவம் நடத்தி வருகிறீர்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி கேட்டே ஆகவேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை, மத்திய ஆட்சியாளர்களுக்கு உள்ளது. எத்தனை ரஃபேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன? பிரான்ஸிடம் இருந்து வாங்கும்போது ஒரு ரஃபேல் விமானத்தின் விலை ரூ.1450 கோடி. இதில் எத்தனை விமானங்களை இழந்தோம் என்று நாடாளுமன்றத்தில் ஆட்சியாளர்களே தெரிவிக்கலாம். அதிகாரிகளும் அமைச்சர்களும் சொல்ல நினைத்தால்கூட பிரதமர் அவர்களை சொல்ல விடமாட்டார்” என்று திமுக எம்.பி டி.ஆர்.பாலு பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.