Senior Citizen App, Tamilnadu Government : தமிழ்நாடு அரசு மூத்த குடிமக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் மற்றும் சேவைகள், மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறது. இருப்பினும் அவர்கள் அரசின் சேவைகளை அரசு அலுவலகங்களுக்கு சென்று பெறும் சிக்கல் நீடிக்கிறது. ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் காரணமாக அவர்களால் அரசு அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று மனு கொடுக்கவோ அல்லது விண்ணப்பிக்கவோ முடிவதில்லை. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூத்த குடிமக்களுக்கு கைப்பேசி செயலி (Senior Citizen Mobile App) உருவாக்கப்பட்டுள்ளது.
இச்செயலியின் செயல்பாட்டை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்களால் செப்டம்பர் 2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலியில், மூத்த குடிமக்களுக்கு தேவையான கீழ்க்கண்ட சேவைகள் இடம் பெற்றுள்ளது.
1. அருகில் உள்ள முதியோர் இல்லங்கள் விவரங்கள்.
2. மருத்துவமனைகள், மக்கள் மருந்தகங்கள் விவரங்கள்.
3. மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் மற்றும் அதிகாரிகள் விவரங்கள்.
4. மாற்று மருத்துவமனை விவரங்கள்.
5.மூ த்த குடிமக்களுக்கான மத்திய, மாநில அரசின் திட்டங்கள்.
6. உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் பற்றிய விவரங்கள்.
7. மேலும் மூத்த குடிமக்கள் தங்கள் குறைகளை தெரிவித்திடும் வகையில் இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
மேற்படி மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலியினை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்கள் தங்கள் திறன் பேசியில் (Play Store) வழியாகவோ அல்லது மூத்தகுடிமக்களுக்கான வலைதளமான (Seniorcitizen tnsocialwelfare.tn.gov.in) வழியாகவோ பதிவிறக்கம் செய்து பயனடையலாம். இதுகுறித்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்புகளை வெளியிட்டு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இப்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் இந்த செயலியை மூத்த குடிமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மற்ற மாவட்டங்களில் இருப்பவர்களும் இந்த செயலியை மூத்த குடிமக்களுக்கு அறிமுகப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இதன் முக்கியத்துவத்தையும், மூத்த குடிமக்கள் செயலியை மூத்த குடிமக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் அவர்களுக்கு மற்றவர்கள் சொல்லிக் கொடுக்குமாறு அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.