புதுடெல்லி: அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி நேற்று சைப்ரஸ் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். சைப்ரஸ், கனடா, குரேஷியா ஆகிய நாடுகளில் அவர் 5 நாள் பயணம் மேற்கொள்கிறார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள விமானப்படை தளங்கள் மற்றும் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதை தொடர்ந்து, இந்தியாவின் பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் குழுவினர் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று, பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்து நேரடியாக விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் இருந்து நேற்று காலை 7 மணிக்கு ‘ஏர் இந்தியா ஒன்’ தனி விமானத்தில் பிரதமர் மோடி சைப்ரஸ் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். 5 நாள் பயணமாக சைப்ரஸ், கனடா, குரேஷியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சர்வதேச அளவில் உள்ள பிரச்சினைகள் குறித்து கருத்துகளை பரிமாறிக்கொள்ள, கனடாவில் நடைபெறும் ஜி7 மாநாடு இடமளிக்கும் என்று நம்புகிறேன். ஜி7 மாநாட்டின்போது பல்வேறு நாட்டு தலைவர்களை சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன். மேலும், இந்தியாவின் தீவிரவாத எதிர்ப்புக்கு ஆதரவு அளித்த நாடுகளுக்கு நன்றி தெரிவிக்க ஒரு வாய்ப்பாகவும் எனது பயணம் அமையும். குறிப்பாக, சைப்ரஸ் நாடு இந்தியாவுடன் மிக நீண்ட காலமாகவே நல்லுறவுடன் இருக்கிறது. இந்தியாவுடன் நட்பு நாடாகவும், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய யூனியனில் மிக முக்கிய நாடாகவும் உள்ளது. இந்த நாட்டுடனான வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, தொழில்நுட்பம், பரஸ்பரம் பொதுமக்கள் சந்திப்பு போன்றவற்றை மேம்படுத்த எனது பயணம் மிகவும் உதவும்.
குரேஷிய அதிபர் ஜோரன் மிலனோவிக், பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளன்கோவிக் ஆகியோரையும் சந்திக்க உள்ளேன். இந்தியாவும், குரேஷியாவும் 100 ஆண்டுகளுக்கு மேல் நெருங்கிய கலாச்சார உறவுகளை கொண்டுள்ளது. இந்திய பிரதமர் என்ற முறையில் முதல்முறையாக குரேஷியா செல்வதால், அந்த நாட்டுடன் புதிய அத்தியாயம் தொடங்கப்படும். இருதரப்பு உறவுகளை மேம்படுத்த இந்த பயணம் உதவும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
முதல் கட்டமாக மத்திய கிழக்கு நாடான சைப்ரஸ் செல்லும் பிரதமர் மோடி இன்று அந்நாட்டு தலைவர்களை சந்தித்து, பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர், பிரதமர் மோடி கனடா செல்கிறார். கனடாவில் ஜி7 நாடுகளின் வருடாந்திர உச்சி மாநாடு 17, 18-ம் தேதிகளில் நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் பங்கேற்குமாறு கனடா பிரதமர் மார்க் கார்னி விடுத்த அழைப்பை ஏற்று மோடி அங்கு செல்கிறார்.
ஜி7 மாநாட்டில், எரிசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள், ஏஐ-ஆற்றல் இணைப்பு, குவான்டம் போன்ற துறைகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஜி-7 தலைவர்கள், அந்த அமைப்புடன் தொடர்புள்ள நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.
இந்த மாநாட்டின்போது,பிரதமர் மோடி பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து, குரேஷியா பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளன்கோவிக்கின் அழைப்பை ஏற்று மோடி 19-ம் தேதி அந்நாட்டுக்கு செல்கிறார். குரேஷியா அதிபரையும் சந்திக்கிறார். பின்னர், பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்புகிறார்.
முக்கியத்துவம் பெறும் சைப்ரஸ் பயணம்: மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள சைப்ரஸ் நாட்டின் அண்டை நாடுகளாக துருக்கி, இஸ்ரேல், எகிப்து, லெபனான், சிரியா உள்ளிட்ட நாடுகள் உள்ளன. இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலின்போது, துருக்கியின் ட்ரோன்கள் மூலம்தான் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அவற்றை இந்திய பாதுகாப்பு கருவிகள் முறியடித்தன. இந்த போரின்போது, பாகிஸ்தானுக்கு துருக்கி பகிரங்கமாக ஆதரவு அளித்தது. தவிர, துருக்கி – சைப்ரஸ் இடையே எல்லை பிரச்சினை உட்பட பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இந்த சூழலில், பிரதமர் மோடி சைப்ரஸ் நாட்டுக்கு செல்வது மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடவ்லிட்ஸ் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளார். முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தியும், கடைசியாக வாஜ்பாயும் சைப்ரஸ் நாட்டுக்கு சென்று வந்துள்ளனர். இந்த நிலையில், 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர், சைப்ரஸ் செல்வது குறிப்பிடத்தக்கது.