ஆம் ஆத்மி ஆட்சியின்போது வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி ஊழல்: அமலாக்கத் துறை தீவிர விசாரணை

ஆம் ஆத்மி ஆட்சியின்போது டெல்லியில் வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடத்தியபோது 12,748 வகுப்பறைகள் கட்டப்பட்டன. இதுதொடர்பாக டெல்லி ஊழல் தடுப்புப் பிரிவு அண்மையில் விசாரணை நடத்தியது. அப்போது வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பது தெரியவந்தது. இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் ஊழலில் தொடர்புடைய 322 வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டு உள்ளன.

வகுப்பறை ஊழல் குறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை டெல்லி முழுவதும் 12,748 வகுப்பறைகள் கட்டப்பட்டன. ரூ.5 லட்சத்தில் ஒரு வகுப்பறையை கட்ட முடியும். ஆனால் ஆம் ஆத்மி அரசு ஒரு வகுப்பறைக்கு ரூ.24.86 லட்சத்தை செலவு செய்ததாக கணக்கு காட்டியிருக்கிறது. மேலும் 1,214 கழிப்பறைகளை, வகுப்பறைகளாக கணக்கு காட்டி உள்ளனர். இதுபோல பல்வேறு வகைகளில் மோசடிகள் நடைபெற்று உள்ளன. ஒட்டுமொத்தமாக ரூ.2,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்கிறது.

முன்னாள் முதல்வர் கேஜ்ரிவாலின் ஆட்சிக் காலத்தில் வகுப்பறைகள் கட்ட 34 நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஆம் ஆத்மியின் பினாமிகள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வகுப்பறை ஊழல் விவகாரம் தொடர்பாக முன்னாள் கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியா, முன்னாள் பொதுப் பணித் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உள்ளிட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த பிப்ரவரியில் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. புதிய முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார். புதிய அரசு பதவியேற்ற பிறகு கடந்த ஆம் ஆத்மி அரசின் பல்வேறு ஊழல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.