பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் குடச்சி தாலுகா சாகர் கிராமத்தை சேர்ந்தவர் யாசீர் (வயது 24). கூலி தொழிலாளி. இவரது நண்பர் ரோகித் (25). கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோகித், யாசீரிடம் ரூ.500 கடன் வாங்கி இருந்தார். ஆனால் அந்த பணத்தை திரும்ப கொடுக்கவில்லை.
இதனால் யாசீர், ரோகித்திடம் பணத்தை திரும்ப தரும்படி கூறினார். ஆனால் ரோகித் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்தார். இதுதொடர்பாக அடிக்கடி 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று இரவு சாகரில் உள்ள அங்கன்வாடி மைய வளாகத்துக்குள் அமர்ந்து ரோகித் மதுகுடித்து கொண்டிருந்தார்.
அங்கு வந்த யாசீர் பணத்தை கேட்டு ரோகித்திடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ரோகித், அங்கிருந்த கத்தியை எடுத்து யாசீரை சரமாரியாக குத்தினார். இதில் யாசீர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குடச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரோகித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.