அகமதாபாத்: நான்கு மாநிலங்களில் 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், குஜராத்தில் ஆளும் பாஜக, ஆம் ஆத்மி கட்சி தலா ஒரு தொகுதிகளை கைப்பற்றின. கேரளா, குஜராத், பஞ்சாப், மேற்குவங்கம் ஆகிய 4 மாநிலங்களில் 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அவற்றில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.
கேரளாவில் உள்ள நிலாம்பூர், குஜராத்தில் உள்ள விஸவாதர் மற்று கடி, பஞ்சாபில் மேற்கு லூதியானா, மேற்கு வங்கத்தில் காளிகஞ்ச் ஆகிய 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. குஜராத் மாநிலம் விஸவாதர் தொகுதியில் ஆம் ஆத்மி எம்எல்ஏ பூபேந்திர பயானி, பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக.வில் இணைந்தார். அதனால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அங்கு ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த கோபால் இடாலியா வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் கிரித் படேலை விட கோபால் 17,581 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
அதேநேரத்தில் குஜராத்தின் கடி தொகுதி பட்டியல் இனத்தவருக்காக ஒதுக்கப்பட்டது. இங்கு பாஜகவின் ராஜேந்திர சவ்தா, காங்கிரஸ் கட்சியின் ரமேஷ் சவ்தாவை 38,904 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்தத் தொகுதியில் பாஜக எம்எம்ஏ கர்சன்பாய் சோலங்கி காலமானதால் இடைத்தேர்தல் நடந்தது.
கேரளாவின் நிலாம்பூரில் சுயேச்சை எம்எல்ஏ பிவி அன்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதனால் இடைத்தேர்தல் நடந்தது. கேரளாவில் ஆளும் இடதுசாரி கூட்டணி வேட்பாளர் ஸ்வராஜை விட, காங்கிரஸ் வேட்பாளர் ஆர்யதன் சவுகத் 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
பஞ்சாப் மாநிலம் மேற்கு லுாதியானா ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் பஸ்ஸி காலமானார். அதனால் இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் சஞ்சீவ் அரோரா 35,179 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பரத் பூஷன் அஷூ 24,542 வாக்குகள் பெற்று 2-வது இடம் பிடித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் காளிகஞ்ச் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ நசிருதீன் அகமது காலமானார். இந்தத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் அலிஃபா அகமது வெற்றி பெற்றார்.
மே.வங்க கொண்டாட்டத்தில் சிறுமி உயிரிழப்பு: மேற்கு வங்க மாநிலம் காளிகஞ்ச் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள், வெற்றி கொண்டாட்டத்தில் இறங்கினர். இதனிடையே திரிணமூல் வேட்பாளர் ஆலிபா அகமதுவை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வேட்பாளர் வீட்டின் மீது பட்டாசுகளையும், நாட்டு வெடிகுண்டுகளையும் போட்டு தங்களது மகிழ்ச்சியை தொண்டர்கள் கொண்டாடினர்.
பரோசந்த்நகர் பகுதியில் திரிணமூல் தொண்டர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வெடித்து கொண்டாடினர். அப்போது நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பரோசந்த் நகர் பகுதியை சேர்ந்த சிறுமி தமன்னா கதுன் உயிரிழந்தார். இதையடுத்து போலீஸார் சிறுமியின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தையொட்டி முதல்வர் மம்தா பானர்ஜி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இந்த சம்பவத்தால் நான் மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். சிறுமியின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன்’’ என்றார்.