லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் மாநில அரசு நடத்தும் லாலா லஜபதிராய் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது. அங்கு கடந்த 20-ந் தேதி, காலில் ஆபரேஷன் செய்து கொள்வதற்காக, ஒரு 15 வயது சிறுமி அனுமதிக்கப்பட்டாள். அவளை கவனித்துக் கொள்ள தாயார் வந்திருந்தார். அதே வார்டில், உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த மோஹித் என்பவர் அனுமதிக்கப்பட்டார்.
அவரை கவனித்துக் கொள்ள அவருடைய சகோதரர் ரோஹித் (வயது 20) வந்திருந்தார். 20-ந் தேதி இரவு, 15 வயது சிறுமி, ஆஸ்பத்திரி கழிவறைக்கு சென்றாள். அப்போது, வாலிபர் ரோஹித்தும் யாருக்கும் தெரியாமல் உள்ளே புகுந்தார். கழிவறையில் வைத்து சிறுமியை கற்பழித்தார். எதிர்ப்பு தெரிவித்தால், கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி, அவர் இந்த பாதக செயலை செய்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமி, அச்சம் காரணமாக, 2 நாட்களாக யாரிடமும் இந்த விஷயத்தை சொல்லவில்லை. நேற்று முன்தினம் மாலை, தன் தாயாரிடம் இந்த கொடூரத்தை தெரிவித்தாள். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார், மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் அடிப்படையில், வாலிபர் ரோஹித்தை போலீசார் கைது செய்தனர். ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு இதில் தொடர்பு இருக்கிறதா என்று கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.