ஆதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே காட்டு யானை தாக்கி சிறுமி பலி

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருச்சூர் அருகே புத்தன்சிறாவை சேர்ந்தவர் நிகில் (வயது 35).

நிகிலின் தாயார் இறந்து அவரது ஈமச்சடங்குகள் ஆதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி அருகே உள்ள ஒரு கோவிலில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள நிகில், அவரது 5 வயது மகள் அக்னிமியாவுடன் சென்றார்.

இவர்களுடன் நிகிலின் தந்தை ஜெயனும் இருந்தார். மூவரும் நீர்வீழ்ச்சியை அடுத்துள்ள காட்டுபகுதியில் இருக்கும் கோவிலுக்கு சென்றனர்.

அப்போது கோவிலுக்கு அருகே உள்ள காட்டுப் பகுதியில் இருந்து திடீரென யானை ஒன்று வந்தது. அதனை கண்டதும் மூவரும் அங்கிருந்து தப்பியோடினர்.

ஆனால் யானை சிறுமி அக்னிமியாவை தாக்கியது. இதில் மிதிப்பட்டு சிறுமி அக்னிமியா பரிதாபமாக இறந்தார். அவரை காப்பாற்ற சென்ற சிறுமியின் தந்தை நிகிலும், தாத்தா ஜெயனும் படுகாயம் அடைந்தனர்.

இதற்குள் சத்தம் கேட்டு அங்கு வந்த கிராம மக்கள் யானையை காட்டுக்குள் விரட்டினர். பின்னர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த நிகில், ஜெயன் இருவரையும் சாலக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சம்பவம் குறித்து போலீசாரும், வனத்துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.