என்ஜின் கவர் இன்றி பறந்த விமானம் – விசாரணைக்கு உத்தரவு

மும்பை:
மும்பை விமான நிலையத்திலிருந்து இன்று காலை அலையன்ஸ் ஏர் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. 4 ஆண்டு பழமையான இந்த விமானத்தில் சுமார் 70 பயணிகள் இருந்தனர். விமானம் பாதுகாப்பாக புஜ் நகரில் தரையிறங்கியது.
மும்பை விமான நிலையத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு விமானம் புறப்பட்டபோது, என்ஜின் கவர் ஓடுபாதையில் விழுந்தது. விமானம் புறப்பட்ட பிறகு ஓடுபாதையில் இருந்து அந்த கவர் கண்டெடுக்கப்பட்டது என மும்பை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனாலும், என்ஜின் கவர் இல்லாமல் விமானம் சென்ற விவகாரம் குறித்து, சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக, கேப்டன் அமித் சிங் கூறுகையில், பராமரிப்பு பணிகளுக்குப் பின் விமானத்தை கிளப்புவதற்கு முன் எஞ்சின் கவர் இருப்பதை பணியாளர்கள் உறுதி செய்வார்கள். மோசமான பராமரிப்புப் பணிகளே இந்தச் சம்பவத்துக்குக் காரணம் என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.