தொடரை கைப்பற்றியது இந்தியா| Dinamalar

ஆமதாபாத்: விண்டீசுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2-0 என தொடரை கைப்பற்றியது.

இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய மோடி மைதானத்தில் நடந்தது. இந்திய அணியில் இஷான் கிஷான் நீக்கப்பட்டு லோகேஷ் ராகுல் தேர்வானார். விண்டீஸ் ரெகுலர் கேப்டன் போலார்டு காயத்தால் விலகினார். நிக்கோலஸ் பூரன் அணியை வழிநடத்தினார். ‘டாஸ்’ வென்ற விண்டீஸ் அணி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா (5) ஏமாற்றினார். ரிஷாப் பன்ட் (18), விராத் கோஹ்லி (18) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய லோகேஷ் ராகுல் 49 ரன் எடுத்தார். அபாரமாக ஆடிய சூர்யகுமார் யாதவ் (64) அரைசதம் விளாசினார். வாஷிங்டன் சுந்தர் (24), தீபக் ஹூடா (29) ஓரளவு கைகொடுக்க இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 237 ரன் எடுத்தது. சகால் (11) அவுட்டாகாமல் இருந்தார். விண்டீஸ் சார்பில் அல்சாரி ஜோசப், ஒடியன் ஸ்மித் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

latest tamil news

சவாலான இலக்கை விரட்டிய விண்டீஸ் அணிக்கு புரூக்ஸ் (44), அகீல் ஹொசைன் (34), ஒடியன் ஸ்மித் (24) ஓரளவு கைகொடுத்தனர். டேரன் பிராவோ (1), கேப்டன் பூரன் (9), ஹோல்டர் (2) உள்ளிட்டோர் ஏமாற்ற விண்டீஸ் அணி 46 ஓவரில் 193 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா 4, ஷர்துல் தாகூர் 2 விக்கெட் கைப்பற்றினர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.