பர்தா தொடர்பான வழக்கு – கூடுதல் அமர்வுக்கு மாற்றி கர்நாடக ஐகோர்ட்டு தனி நீதிபதி உத்தரவு

பெங்களூரு:
கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
 
இந்தப் போராட்டத்துக்கு எதிராக, சில மாணவர்கள் காவித்துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
ஹிஜாப் அணியும் மாணவிகளை வகுப்புக்குள் அனுமதித்தால் காவித்துண்டு அணிந்த எங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று அந்த மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதனால் கர்நாடகா மாநில கல்லூரிகளில் பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து கர்நாடகத்தில் 3 தினங்களுக்கு  அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 
இதற்கிடையே, ஹிஜாப் தடைக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுக்கள்  தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் கல்லூரி வளாகங்களில் ஹிஜாப் அணிவதை எதிர்த்து உடுப்பி கல்லூரி மாணவர்கள் சார்பிலும் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், அந்த மனுக்கள் மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு தனி நீதிபதி கிருஷ்ணா தீக்சித் முன்னிலையில் இன்று நடைபெற்றது.  
அப்போது, கர்நாடக அரசின் ஒரே சீருடை திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என நீதிபதி தெரிவித்தார். மேலும், ஹிஜாப் அணிவது தொடர்பான பிரச்சினையை கர்நாடக ஐகோர்ட்டின் விரிவான அமர்வு விசாரிக்கும் என உத்தரவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.