அ.தி.மு.க. ஆட்சியில்தான் நீட் தேர்வு வந்தது என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்க தயார் – மு.க.ஸ்டாலின்

சென்னை:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக பிரசாரம் மேற்கொண்டார்.
ஈரோட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்களை எடுத்துரைத்து முதல்வர் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
தேர்தலுக்காக உருவானதல்ல தி.மு.க. தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்ற உருவான இயக்கமே தி.மு.க. தமிழர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட கட்சி தி.மு.க.
தி.மு.க. ஆட்சி இதுவரை நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய ஆட்சியாக இருந்தது. இனியும் இருக்கும். மக்களின் கோரிக்கைகளை உடனடியாக தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது.
தமிழகத்தில் நுழைவுத் தேர்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. நீட் தேர்வு, மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகே அமலுக்கு வந்தது.
நீட் தேர்வை தி.மு.க., காங்கிரஸ் கொண்டு வந்ததாக அ.தி.மு.க. தொடர்ந்து பொய் குற்றச்சாட்டு கூறிவருகிறது. நீட் தேர்வை ஜெயலலிதா எதிர்த்தாலும், ஈ.பி.எஸ். ஆட்சிக்கு வந்த பிறகே தமிழகத்தில் அமலுக்கு வந்தது.
தமிழகத்தில் இனி நிரந்தரமாக தி.மு.க. ஆட்சிதான் என்ற நிலை உருவாகும். நான் நிரந்தர முதல்வராக வேண்டும் என்பதற்காக அல்ல; தி.மு.க. தமிழர்களின் உணர்வோடு உருவான இயக்கம் என்பதற்காக.
தமிழகத்தில் நீட் தேர்வு அ.தி.மு.க. ஆட்சியில்தான் வந்தது. இதை ஆதாரங்களுடன் நிரூபிக்க தயார். நீட் தேர்வு குறித்து விவாதிக்க தயாரா?  என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.