கர்நாடகாவில் பிப்ரவரி 14 முதல் பள்ளிகள் திறப்பு – பசவராஜ் பொம்மை

பெங்களூரு:
கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனால் சில கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவ, மாணவியர்கள் குல்லா, ஹிஜாப், பர்தா, புர்கா போன்றவை அணிந்து வர தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதை ஏற்கமறுத்த இஸ்லாமிய மாணவிகள், தங்கள் உரிமையில் தலையிடுவதாக கூறி ஹிஜாப் அணிந்தே கல்லூரிக்கு வந்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஹிஜாப் விவகாரம் தொடர்பாக மாநிலம் முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடந்தது. சில இடங்களில் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
இதையடுத்து, கர்நாடக மாநிலத்தில் நிலவும் அசாதாரண நிலையைக் கருத்தில் கொண்டு முதல் மந்திரி பசவராஜ் பொம்மை பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை அறிவித்தார்.
இதற்கிடையே, பள்ளி, கல்லூரிகளுக்கு கர்நாடக அரசு விதித்துள்ள ஆடை கட்டுப்பாட்டு மற்றும் உடுப்பியில் உள்ள அரசு கல்லூரியில் மாணவிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆடை கட்டுப்பாடுகளுக்கு தடை விதிக்கக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த தனி நீதிபதி, இந்த வழக்கை 3 பேர் கொண்ட ஐகோர்டு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றியது.
இந்த வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வரும் வரை பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் ஹிஜாப் அல்லது காவித்துண்டு என எந்த வித மத அடையாளங்களையும் வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வரக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், கர்நாடகாவில் முதல் கட்டமாக வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகளை திறக்க கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். திங்கட்கிழமை முதல் 10-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 
நிலைமையை பொறுத்து விரைவில் 11 மற்றும் 12-ம் வகுப்பு திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். கல்லூரிகள் திறப்பு குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.