புதிய வகை கொரோனா உருவாக வாய்ப்பு- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனீவா:

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 2 ஆண்டுகள் முடிந்து 3-வது ஆண்டாக உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஒமைக்ரான் என தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. இதையொட்டி உலக சுகாதார அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கேள்வி-பதில் நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அந்த அமைப்பின் கொரோனா தொழில்நுட்பக்குழுவின் தலைவர் மரியா வான்கோவ் பதில் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பற்றி நிறைய தெரிந்துகொண்டுள்ளோம். ஆனால் எல்லாமே நமக்கு தெரியாது. மேலும் வெளிப்படையாக சொன்னால் இந்த வைரஸ் உருமாற்றங்கள் வைல்டு கார்டு போல திடீரென்று தோன்றலாம். எனவே நாங்கள் நிகழ்நேரத்தில் அதைக் கண்காணிக்கிறோம். இது மாறும்போது, உருமாற்றம் நேருகிறது. அது மேலும் உருமாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

ஒமைக்ரான் வைரஸ் கவலைக்குரிய மாறுபாடு. இது கடைசி உருமாற்றமாக இருக்காது. அடுத்தது உங்களுக்கு தெரியும். அது பரவ சிறிது காலம் அவகாசம் எடுக்கும். நாம் மற்ற வகை உருமாற்ற வைரஸ்களைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் உண்மையிலேயே அதிகமாக உள்ளது. பிஏ.1 வைரசை விட பிஏ.2 வைரஸ் அதிகமாக பரவக்கூடியது. எனவே உலகம் முழுவதும் இந்த பிஏ.2 வைரஸ் கண்டறியப்படுவதை நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஒமைக்ரான் பரவல் உலகளவில் அதிகரித்துள்ளது. தற்போது கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் அது உள்ளது. அதே நேரத்தில் முதலில் இந்த வைரஸ் பரவல் எழுச்சியை அறிவித்த நாடுகளில் அது கடந்த மாதம் முதல் குறையத்தொடங்கி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனால் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ்கள் உருவாக வாய்ப்பு இருக்கிறது என்பது தெளிவாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.