தமிழ்நாட்டு மீனவர்கள் கைது கொடுமைக்கு முடிவே இல்லையா? ராமதாஸ் கேள்வி

சென்னை:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை அவர்களின் படகுகளுடன் சிங்களப்படை கைது செய்திருக்கிறது. சிங்களக் கடற்படையினரின் இந்த தொடர் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது; இதை இனியும் இந்திய அரசு அனுமதிக்கக்கூடாது.
ஜனவரி 31-ந்தேதி 21 பேர், பிப்ரவரி 8-ந்தேதி 11 பேர், இன்று 12 பேர் என கடந்த இரு வாரங்களில் மட்டும் மொத்தம் 3 முறை 44 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிடம் உதவி பெறும் இலங்கை, இந்திய இறையாண்மை மீது தொடர் தாக்குதல் நடத்துவதை வேடிக்கை பார்க்கக்கூடாது.
இன்று கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் உட்பட இதுவரை கைது செய்யப்பட்ட 44 மீனவர்களையும், அவர்களின் படகுகளுடன் உடனடியாக விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.