ஹிஜாப் அணியாத பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்: கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. சர்ச்சை கருத்து

ஹூப்ளி:
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். அதற்கு அக்கல்லூரி முதல்வர் தடை விதித்தார். இதை எதிர்த்து அந்த மாணவிகள் போராட்டம் நடத்தினர்.பதிலுக்கு இந்து மாணவர்களும் காவி துண்டு போட்டு வந்தனர். 
இதனால் அந்த மாநிலத்தில் மத ரீதியிலான மோதல் போக்கு ஏற்பட்டது. இதுதொடர்பாக கடந்த 8-ந் தேதி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இது கர்நாடகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பிரச்சினை ராஜஸ்தானிலும் பரவியுள்ளது.
இந்நிலையில்  கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏவும், அம்மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ஜமீர் அகமது,  ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். 
ஹூப்ளியில் பேசிய அவர், ஹிஜாப் என்றால் இஸ்லாத்தில் பர்தா என்று பொருள் எனவும், பெண்களின் அழகை மறைப்பதற்காக பர்தா பயன் படுத்தப்படுகிறது என்றும் கூறினார். ஹிஜாப் அணியாத பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.