உக்ரைன் எல்லையில் இருந்து ரஷ்ய படைகள் திரும்புவது உறுதி படுத்தப்படவில்லை – நேட்டோ தகவல்

பிரஸ்சல்ஸ்:
ரஷியா – உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதை தணிக்க அமெரிக்கா உள்பட பல்வேறு கூட்டணி நாடுகள் முயற்சித்து வருகின்றன. 
இந்நிலையில் உக்ரைன் மீது படையெடுக்கும் எண்ணமில்லை என ரஷியா தெரிவித்தது. ஆனால் உக்ரைன் எல்லையில் உள்ள கிரிமியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரஷியா படைகள் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், ராணுவ பயிற்சியை நிறைவு பெற்றதால் உக்ரைன் எல்லையில் உள்ள கிரிமியாவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள அனைத்து வீரர்களும் முகாமிற்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் ரஷியா அறிவித்திருந்தது.
எனினும் ரஷ்ய படைகள் உக்ரைன் எல்லையில் இருந்து திரும்புவது உறுதிபடுத்தப் படவில்லை என நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.  
பிரஸ்சல் நகரில் உள்ள நேட்டோ கூட்டணி அமைப்பு நாடுகளின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம்  அவர் தெரிவிக்கையில்:
ரஷ்ய படைகள் திரும்பப் பெறப்படுகிறதா என்பதைப் பார்க்க வேண்டும். நாங்கள் பார்ப்பது என்னவென்றால், அவர்கள் துருப்புக்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளனர், மேலும் துருப்புக்கள் வரவுள்ளன. 
அவர்கள் உண்மையிலேயே படைகளைத் திரும்பப் பெறத் தொடங்கினால், அதை நாங்கள் வரவேற்போம். அவர்கள் எப்போதும் படைகளை முன்னும் பின்னுமாக நகர்த்திக் கொண்டிருப்பதால், படைகள், போர் டேங்கிகள் நகர்வுகளைப் பார்க்கிறோம். 
உண்மையான வெளியேற்றத்தை உறுதிப்படுத்தவில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.