வீடுகளில் பாதுகாப்பு இல்லாதவர்களுக்குதான் ஹிஜாப் தேவை: பிரக்யா தாகூர்

கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிவதற்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், உடுப்பி மாவட்டத்தில் ஆறு மாணவிகள் தடையை எதிர்த்து நீதிமன்றத்தை நாடினர்.

அதில் இருந்து ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தற்போது இதுகுறித்த விசாரணை அம்மாநில உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் பா.ஜனதா எம்.பி. பிரக்யா தாகூர், வீட்டில் பாதுகாப்பு இல்லாதவர்களுக்குதான் ஹிஜாப் தேவை எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஒரு கோவிலில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொணட எம்.பி. பிரக்யா தாகூர் ‘‘வீட்டில் பாதுகாப்பு இல்லாத மக்களுக்கு மட்டும், ஹிஜாப் அணிவது தேவை. பொது இடங்களில் ஹிஜாப் தேவையில்லை.

எல்லா இடங்களிலும் ஹிஜாப் அணிய வேண்டாம். வீட்டில் பாதுகாப்பு இல்லாத மக்கள் அணியலாம். உங்களுக்கு மதராசா உள்ளது. நீங்கள் அங்கு ஹிஜாப் அணிந்தால், அதுபற்றி எங்களுக்கு ஒன்றுமில்லை. வெளியில், இந்து கோவில்கள் இருக்கும் இடத்தில், ஹிஜாப் தேவையில்லை’’ என்றார்.

மேலும், ‘‘ஹிஜாப் என்பது புர்கா. தீயக் கண்களால் பார்க்கப்படுவதற்கு எதிராக புர்கா பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், குறிப்பிட்ட இந்துக்கள் அந்த எண்ணத்தில் அவர்களை பார்க்க மாட்டார்கள். அவர்கள் பெண்களை வணங்குகிறார்கள். நீங்கள் உங்கள் வீட்டில் ஹிஜாப் அணிய வேண்டும்’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.