கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலுக்கு 2 டன் எடையில் பாயாசம் தயாரிக்க பிரமாண்ட வெண்கல உருளி காணிக்கை

திருவனந்தபுரம்:

கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவில் உள்ளது.

குருவாயூர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பால் பாயாசம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது கோவில் சமையல் அறையில் தயாரிக்கப்படுகிறது.

தற்போது இந்த பாயாசம் தயாரிப்பதற்காக பாலக்காட்டை சேர்ந்த பக்தர் ஒருவர் ராட்சத வார்ப்பு உருளி ஒன்றை காணிக்கையாக வழங்கி உள்ளார்.

இந்த வார்ப்பு உருளி முழுக்க, முழுக்க வெண்கலத்தால் செய்யப்பட்டு உள்ளது. இதனை மன்னார் வெண்கல சிற்பிகள் வடிவமைத்தனர்.

இவர்கள் பல்வேறு கோவில்களுக்கு கொடி மரம் மற்றும் சிற்பங்களை வெண்கலத்தில் தயாரித்து கொடுத்தவர்கள். குருவாயூர் கோவிலுக்காக வெண்கல உருளியை கடந்த 3 மாதங்களாக செய்து வந்தனர்.

2 டன் எடையில் மிகவும் பிரமாண்டமாக தயராகி வந்த வார்ப்பு உருளி செய்யும் பணி சமீபத்தில் முடிவடைந்தது. இதை தொடர்ந்து வார்ப்பு உருளியை கோவிலில் காணிக்கையாக செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

இதற்காக வார்ப்பு உருளியை பக்தர்கள் ராட்சத கிரேன் மூலம் கோவிலுக்கு கொண்டு வந்தனர். கோவிலின் தென்புறம் வழியாக கூத்தம்பலத்துக்கு உருளி கொண்டு வரப்பட்டு, கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது.

இனி கோவிலில் பக்தர்களுக்கு வழங்கும் பால் பாயசம் இந்த வார்ப்பு உருளியில் தயாரிக்கப்படும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.