சீர்காழி: தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து சிதறியதில் வெளிமாநில வாலிபர்கள் 2 பேர் பலி

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கிராமத்தில் அலிஉசேன் என்பவருக்கு சொந்தமான பிஸ்மி பிஷ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் மீனிலிருந்து எண்ணெய் மற்றும் பவுடர் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை அமைந்துள்ளது.

இந்த தொழிற்சாலையில் வெளிமாநிலத்தவர் உள்பட அப்பகுதியை சேர்ந்தவர்களும் வேலை பார்த்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் பணியாளர்கள் வந்ததால் எண்ணெய் மற்றும் பவுடர் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வந்தது.

மதியம் 12.10 மணியளவில் தொழிற்சாலையில் அமைந்துள்ள பாய்லர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதில் பாய்லர் அருகே வேலை பார்த்துக் கொண்டிருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அருண்ஓரானா(வயது25), பல்ஜித்ஓரான்(20) ஆகிய இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாயினர். மேலும் இதில் பாய்லர் ஆபரேட்டர் உச்சிமேடு பகுதி ரகுபதி(53), பந்தநல்லூர் பகுதி மாரிதாஸ்(45), திருமுல்லைவாசல் பகுதியை சேர்ந்த ஜாவித்(29) ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர்.

3 பேரையும் சக பணியாளர்கள் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் தொழிற்சாலையில் குவிந்தனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த சீர்காழி போலீசார் உடனடியாக விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.