ஆப்கானிஸ்தானுக்கு முதல் கட்டமாக 2500 டன் கோதுமை அனுப்பி வைத்தது இந்தியா

புதுடெல்லி:
ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றிய நிலையில், அங்கு மக்கள் வாழ்வதற்கான சூழல் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இது உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 1-ம் தேதி 1.6 டன் அளவிலான உயிர்காக்கும் மருந்துகளை விமானம் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது. அதன் தொடர்ச்சியாக 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகளும் வழங்கப்பட்டது.
 
ஆப்கானிஸ்தானுக்கு 2 டன் அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகளை கொண்ட 3-வது தொகுதி மருத்துவ உதவியை இந்தியா வழங்கியது. அவை காபூலில் உள்ள இந்திரா காந்தி ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டன என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
இதற்கிடையே, பாகிஸ்தான் வழியாக சாலைப்பயணம் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு 50 ஆயிரம் டன் கோதுமையை அடுத்த வாரம் இந்தியா அனுப்ப உள்ளது என அந்நாட்டு தூதுவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு முதல் கட்டமாக 2,500 டன் கோதுமையை 50 லாரிகள் மூலம் பாகிஸ்தான் வழியாக காபூலுக்கு அனுப்பி வைத்துள்ளது. அடுத்த வாரம் மீதமுள்ள கோதுமையை அனுப்ப உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.