பஞ்சாயத்து தேர்தலில் தோல்வி அடைந்த வேட்பாளர் செய்த காரியம்- போலீஸ் விசாரணை

புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தில் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் தோல்வியடைந்ததால் ஆத்திரமடைந்த வேட்பாளர் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டம் கங்காபடா கிராம பஞ்சாயத்து தேர்தலில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாரிக் சபார் என்ற வேட்பாளர் தோல்வி அடைந்துள்ளார். இதனால் கடும் அதிருப்தியில் இருந்த அவர், தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து கிராம சாலையை தோண்டியும், பெரிய பாறாங்கற்களை குறுக்கே போட்டும் போக்குவரத்து தடையை ஏற்படுத்தி உள்ளார். மேலும் தெரு விளக்குகளை அகற்றி உள்ளார்.
கங்காபடா கிராம பஞ்சாயத்து பகுதியுடன் இணைக்கும் முக்கிய சாலைகளில் ஒன்றை தோண்டியதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இப்பகுதிக்கு செல்ல மாற்று சாலைகள் உள்ள நிலையில், குழி தோண்டப்பட்ட சாலை குறுக்குவழியாகவும், கிராம மக்கள் எளிதில் செல்லக்கூடியதாகவும் இருந்ததாக கிராம மக்கள் கூறுகின்றனர். இதனால், தலசாஹி, கந்தகும்பா, ஷகாடியா, லோபா, முன்டாசாஹி ஆகிய கிராம மக்கள் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்படுவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். 
இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தோண்டப்பட்ட சாலையை மூடி போக்குவரத்தை சரி செய்தனர்.  மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள கங்காபடா பஞ்சாயத்தில் மொத்தம் 24 கிராமங்கள் உள்ளன. சுமார் 1500 வாக்காளர்கள் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.