உக்ரைன் ராணுவத்தில் சேர விருப்பம் தெரிவிக்கும் பிரிட்டன் ராணுவ வீரர்

கீவ்:
உக்ரைனில் ரஷியாவிற்கு எதிராக போரிடுவதற்காக அந்நாட்டு மக்களை ராணுவத்தில் சேருமாறு அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்திருந்தார்.
18 முதல் 60 வயதுக்கும் இடைப்பட்ட  உக்ரைன் ஆண்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அந்நாட்டு அரசு தடை செய்துள்ளது.  இதனையடுத்து
உக்ரைன் ராணுவத்தில் சேர ஏராளமானோர் முன் வந்துள்ளனர்.தலைநகர் கீவ்-வில், ராணுவத்தில் சேர நூற்றுக்கணக்கான உக்ரைன் ஆண்கள் வரிசையில் நிற்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
இந்நிலையில் பிரிட்டன் ராணுவ வீரர் மார்க் அயர்ஸ், உக்ரைன் ராணுவத்தில் சேர விருப்பம் தெரிவித்து தலைநகர் கீவ் சென்றுள்ளார்.
உக்ரைன் நிலைமை குறித்து தாம் தொலைகாட்சியில் பார்த்ததாகவும், அங்குள்ள மக்கள், ராணுவம் மற்றும் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோர் தமக்கு உத்வேகம் அளித்துள்ளதாகவும் ஸ்கை நியூஸ் நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியுள்ளார். 
ராணுவத்தில் பணியாற்றிய அனுபவம் தமக்கு உள்ளதாகவும், அதை பயன்படுத்தி, உக்ரைன் ராணுவத்திற்கு தமது பங்களிப்பை அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் உள்ள தமக்கு தெரிந்தவர்களையும் ராணுவத்தில் இணைக்க முடியும் என்றும், உக்ரைன் ராணுவத்தில் சேவையாற்ற தாம் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் இங்கு தங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் மார்க் அயர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.