ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை சேர்க்க வேண்டும்- லிதுவேனியா அதிபர் வலியுறுத்தல்

ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை சேர்க்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த மாதம் விண்ணப்பித்தார். ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எதையும் ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கவில்லை. இதற்கிடையே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கூட்டம் நடந்தது. 27 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக லிதுவேனியா அதிபர் கிடானாஸ் நவுஸ்தா டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, “5 மணி நேர விவாதங்களுக்கு பிறகு ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் உக்ரைனின் ஐரோப்பிய ஒருங்கிணைப்புக்கு சம்மதம் என்று தெரிவித்தனர். அதற்கான செயல்முறை தொடங்கியது. அதை விரைவாக நிறைவேற்றுவது நமக்கும், உக்ரைனுக்கும் முக்கியமானது. வீர உக்ரைனிய நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் வரவேற்கப்படுவதற்கு தகுதி உடையது” என்றார்.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷிய ராணுவம் அந்நாட்டின் சில நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. சிறு நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன.
இந்த நிலையில் ரஷியா மேலும் ஒரு நகரை கைப்பற்றி உள்ளது. வோல்னோவாகா நகரை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. அந்த நகர் முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக தெரிவித்துள்ளது.
ரஷியா சில நாட்களுக்கு முன்பு முதல் முதலாக தற்காலிக போர் நிறுத்தத்தை 2 நகரங்களில் அறிவித்தது. அதில் வோல்னோவாகா நகரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.