பிரதமர் மோடியை சந்திக்கும் யோகி ஆதித்யநாத்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது இமேஜ் சார்ந்த விஷயம் என்பதாலும், அங்கு ஆட்சியை கைபற்றி விட்டால் நாடாளுமன்றத்தில் அமர்ந்து விடலாம் என்று கூறப்படுவதாலும், அரசியல் கட்சிகளிடையே குறிப்பாக, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே அங்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கடும் போட்டி நிலவியது.

கடந்த 2017ஆம் ஆண்டு தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களை கைபற்றியது. சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் படு தோல்வி அடைந்தது. எனவே, இம்முறை காங்கிரஸ் கூட்டணியில் இருந்து சமாஜ்வாதி கட்சி வெளியேறி விட்டது. அதற்கு முக்கிய காரணமாக காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்ததாலேயே அக்கட்சி படுதோல்வி அடைந்தது என்று சொல்லப்பட்டது.

இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. சமாஜ்வாதி கட்சி இரண்டாவது இடம் பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி அம்மாநிலத்தில் படு தோல்வி அடைந்துள்ளது.

இதையடுத்து, உத்தரப்பிரதேச மாநில முதல்வராக
யோகி ஆதித்யநாத்
மீண்டும் பொறுப்பேற்கவுள்ளார். இந்த நிலையில், யோகி ஆதித்யநாத் டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் மோடியை சந்திக்கும் அவர், உத்தரப்பிரதேசத்தில் அமையவுள்ள புதிய அமைச்சரவை குறித்து விவாதிக்கவுள்ளதாக தெரிகிறது. பதவியேற்பு விழா குறித்தும் அப்போது முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது. யோகியின் எதேச்சாதிகார அணுகுமுறை ஏற்கெனவே கட்சிக்குள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படும் நிலையில், அவர் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார். எனவே, அவரிடம் இருக்கும் நிறை, குறைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.