சிறுமிக்கு பாலியல் தொல்லை; விவசாயிக்கு ஏழு ஆண்டுகள் சிறை – மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!

ராமநாதபுரம் மாவட்டம், பரமகுடி தாலுகா நாயினார்கோவில் அருகே உள்ள தவளைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (38). விவசாயியான இவர் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி அந்தப் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த ஆறு வயது சிறுமியை, இனிப்பு பண்டங்கள் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி கூட்டிச் சென்று, ஆளில்லாத இடத்தில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட, அவரை அவர் பெற்றோர் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர். அப்போது மருத்துவர்கள் அந்தச் சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போது வேலுச்சாமி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் கூறியிருக்கிறார். இதையடுத்து பரமக்குடி மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் கொடுத்தார். அதன்பேரில் மகளிர் போலீஸார் வேலுச்சாமியை கைது செய்தனர்.

ராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்றம்

இதுதொடர்பான வழக்கு ராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்று வந்த நிலையில், இன்று மகளிர் நீதிமன்ற நீதிபதி சுபத்ரா இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வேலுச்சாமிக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் 70 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதத்தை கட்டத் தவறினால், மேலும் ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் தீர்ப்பளித்தார்.

வேலுச்சாமி

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ஒரு லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்வதாக தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.