வருமான வரித்துறை வரலாற்றில் அதிக அளவில் வரி வசூல்- நேரடி வரிகள் வாரிய தலைவர் பேட்டி

புதுடெல்லி:
வருமான வரித் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அதிக அளவில் வசூல் செய்திருப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் ஜே.பி.மொஹபத்ரா தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டில் முன்கூட்டிய வரி செலுத்துதல் மூலம் வரி வருவாய் 41 சதவீதம் அதிகரிப்பால் நேரடி வரி வசூல் 48 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக நேரடி வரிகள் வாரிய தலைவர் ஜே.பி.மொஹப்த்ரா மேலும் கூறியதாவது:-
நடப்பு நிதியாண்டில் இதுவரை நிகர வரி வசூல் ரூ.13.63 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த 2018-19ம் ஆண்டில் ரூ.11.18 லட்சம் கோடி, 2019-20ல் ரூ.10.28 லட்சம் கோடி, 2020-21ல் ரூ.9.24 லட்சம் கோடி என்ற அளவில் வரி வசூல் இருந்தது. 
இந்த ஆண்டின் நிகர வரி வசூலானது 2020-21ஐ விட 48.4 சதவீதம் அதிகம் ஆகும். 2019-20 வரி வசூலை விட 42.5 சதவீதம், 2018-19ஐ விட 35 சதவீதம் அதிகமாக இந்த ஆண்டின் வரி வசூல் உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில், நிகர வரி வசூல் அதிகமாக உள்ளது. 
இந்த ஆண்டின் மொத்த வரி வசூலைப் பொருத்தவரை இதுவரை ரூ.15.50 லட்சம் கோடியாக உள்ளது. இது 2020-21ல் உள்ளதைவிட 38.3 சதவீதம் அதிகம். 2019-20ஐ விட 36.6 சதவீதம், 2108-19ஐ விட 32.7 சதவீதம் அதிகம் ஆகும். இதுவரை ரூ.12.79 லட்சம் கோடிக்கு மேல் வசூலை தாண்டியதில்லை. இந்த ஆண்டு, ரூ.15 லட்சம் கோடி என்ற மொத்த வரி வசூலை தாண்டி உள்ளோம். இது வருமான வரித்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகம் ஆகும்.
எல்லா வகையிலும், வரி வசூல் அளவானது, வருமான வரித்துறையின் வரலாற்றில் அதிகம்.
இவ்வாறு மொஹபத்ரா தெரிவித்தார்.
இந்த நிதியாண்டில் மார்ச் 16ம்  தேதி வரையிலான நிகர நேரடி வரி வசூல் ரூ. 13.63 லட்சம் கோடியாக இருந்தது, இது முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.9.18 லட்சம் கோடியாக இருந்தது என நேரடி வரிகள் வாரியம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.