இலங்கையில் சமூக வலைத்தளங்களுக்கு தடை விதித்தது முற்றிலும் பயனற்றது- அமைச்சர் நாமல் ராஜபக்சே

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இலங்கை அரசு சிக்கியது. அத்தியாவசிய தேவைகளுக்கு பெரும்பாலும் இறக்குமதியை நம்பி இருந்த நிலையில், அன்னியச் செலாவணியில்லாததால், இறக்குமதி பாதித்தது. உணவுப் பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

மேலும், இலங்கையில் தினமும் 13 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் தெருவில் இறங்கி போராடினார்கள்.

கடந்த 31-ம் தேதி கொழும்பு நகரில் அதிபர் மாளிகை முன் ஆயிரக்கணக்கானோர் கூடி அதிபருக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. கண்ணீர்ப் புகைகுண்டுகளை வீசி மக்களை விரட்டியடித்தனர். பலர் படுகாயம்  அடைந்தனர்.

50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே, அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையில் அவசர நிலையை அமல்படுத்தினார். நேற்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, நாட்டில் போராட்டங்களைத் திட்டமிடுவதற்கும் மக்களைத் திரட்டுவதைத் தடுக்கவும் சமூக வலைதளங்களை அந்நாட்டு அரசு முடக்கியது.

இதனால் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மற்றும் யூ டியூப் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகத் தளங்களை இலங்கை அரசாங்கம் முடக்கியது.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களை முடக்குவது முற்றிலும் பயனற்றது என்று இலங்கை அமைச்சரும், பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் மூத்த மகனுமான நாமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

சமூக ஊடகங்களைத் தடுப்பதை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன். நான் இப்போது பயன்படுத்துவதைப் போலவே விபிஎன் நெட்வொர்க் கிடைக்கும் தன்மையும் உள்ளது. இதுபோன்ற தடைகள் முற்றிலும் பயனற்றவை. அதிகாரிகள் இன்னும் முன்போக்கான முறையில் சிந்தித்து இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்..
பாகிஸ்தான் பாராளுமன்றத்தைக் கலைக்க கோரி அதிபருக்கு இம்ரான் கான் கடிதம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.