சிங்கப்பூரில் போதை பொருள் கடத்தல்: மலேசிய தமிழருக்கு 27-ந்தேதி தூக்குத்தண்டனை

கோலாலம்பூர்:
மலேசியாவை சேர்ந்தவர் நாகேந்திரன் தர்மலிங்கம், தமிழ் வம்சாவழி இளைஞரான இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு 42.72 கிராம் ஹெராயின் போதைபொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டார்.
அப்போது அவருக்கு 21 வயதே ஆகியிருந்தது. மேலும் அவர் மனநலம் குன்றியவராக இருந்ததாக அவரது தாய் தெரிவித்து இருந்தார்.சிங்கப்பூரை பொறுத்தவரை 15 கிராமுக்கு மேல் ஹெராயினுடன் பிடிபட்டால் மரணதண்டனை விதிக்க அந்நாட்டு சட்டத்தில் இடம் உள்ளது. அதன்படி நாகேந்திரன் தர்மலிங்கத்துக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் 10-ந்தேதி அவரை துக்கில் போட இருப்பதாக அவரது தாய்க்கு கடிதம் அனுப்பபட்டது. இந்தநிலையில் மனநலம் குன்றிய அவரை துக்கில் போடுவதை நிறுத்தி வைக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. மேலும் மேல்முறையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் நாகேந்திரன் தர்மலிங்கம் ஹெராயின் கடத்திய போது நல்ல மனநிலையில் தான் இருந்தார் என மனநல நிபுணர்கள் சான்றிதழ் அளித்து உள்ளதாக சிங்கப்பூர் அரசு சார்பில் கூறப்பட்டது.
மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது தர்மலிங்கத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனால் அவரது மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அவர் தூக்கில் இருந்து தப்பினார்.
இதற்கிடையில் மரண தண்டணையை குறைக்க வேண்டும் என்ற கடைசி மேல் முறையீட்டு மனுவை சிங்கப்பூர் கோர்ட்டு கடந்த மாதம் 29-ந்தேதி தள்ளுபடி செய்தது.
இதையடுத்து அவரை வருகிற 27-ந்தேதி (புதன்கிழமை) தூக்கில் போட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக அங்குள்ள பத்திரிக்கைகள் தெரிவித்து உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.