ஆலப்புழாவில் கார் மீது லாரி மோதல்- குழந்தை உள்பட 4 பேர் உயிரிழப்பு

திருவனந்தபுரம்:

திருவனந்தபுரத்தை அடுத்த நெடுமங்காடு பகுதியை சேர்ந்தவர் சுதீஷ் லால் (வயது 37). சுதீஷ் லாலின் மனைவி ஷைனி. இவர் சவுதி அரேபியாவில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த ஷைனி இன்று சவுதி அரேபியா செல்ல இருந்தார்.

இதற்காக கொச்சி விமான நிலையத்திற்கு சுதீஷ் லால், ஷைனி மற்றும் அவரது குடும்பத்தினர் ஒரு காரில் சென்றனர்.

இன்று அதிகாலையில் நெடுமங்காட்டில் இருந்து புறப்பட்ட அவர்கள், பால்குளங்கரா தேசி நெடுஞ்சாலையில் சென்றபோது எதிரே வந்த லாரி, கார் மீது மோதியது.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்தவர்களும் உடல் நசுங்கி அலறினர்.

அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் காரில் இருந்தவர்களை மீட்க முயன்றனர். இதற்கிடையே போலீசாரும் அங்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் காரில் இருந்த சுதீஷ் லால், ஷைஜூ, அபிராக் மற்றும் ஒரு குழந்தை என 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். வெளிநாட்டிற்கு செல்ல இருந்த ஷைனி படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

மீட்பு படையினர் அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒரே ஊரை சேர்ந்த 4 பேர் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.