பெங்களூருவில் ரூ.1 கோடியை வழிப்பறி செய்த கொள்ளையர்களை காட்டிக்கொடுத்த பாஸ்டேக்

பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூருவில் ரூ.1 கோடியை வழிப்பறி செய்த கொள்ளையர்கள் பாஸ்டேக்கால் பிடிபட்டனர்.

தமிழகத்தின் நாகர்கோவிலை சேர்ந்தவர் ஜோசப். தங்க வியாபாரியான இவருக்கு கர்நாடகாவில் ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்களிடம் பணம் வசூல் செய்வதற்காக ஜோசப்பிடம் பணியாற்றும் பிராங்ளின் உட்பட 5 பேர் கடந்த மார்ச் மாதம் கர்நாடகாவின் ஹூப்ளிக்கு சென்றிருந்தனர். வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.1 கோடி வசூல் செய்துவிட்டு காரில் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். கடந்த மார்ச் 11-ம் தேதி அதிகாலையில் பெங்களூரு புறநகர்ப் பகுதியான மாதநாயக்கனஹள்ளியில் அவர்கள் கார் வந்தபோது, மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்தனர்.

பிராங்ளின் மற்றும் அவரோடு இருந்தவர்களை ஆயுதங்களால் தாக்கிவிட்டு ரூ.1 கோடி ரொக்கம், அவர்களது செல்போன்கள் மற்றும் காரையும் பறித்துச் சென்றனர். இந்த துணிகர கொள்ளை குறித்து பெங்களூரு ஊரகப் பகுதி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது பிராங்ளினிடம் இருந்து பறித்த காரை 50 கி.மீ. தொலைவில் விட்டுவிட்டு தங்களது காரில் கொள்ளையர்கள் தப்பிச் சென்றிருப்பது தெரியவந்தது. கர்நாடகாவின் சாமராஜ்நகர் மாவட்டம் வழியாக தமிழக எல்லைக்குள் அவர்களின் கார் நுழைந்துள்ளது. ஆனால் தமிழகஎல்லையில் காரின் எண் மாறி,கேரள பதிவு எண் பலகை காரில் பொருத்தப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து சுங்கச்சாவடிகளை கார் கடந்தபோது பாஸ்டேக் கட்டண விவரங்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். கர்நாடகாவின் மாதநாயக்கனஹள்ளியில் இருந்து கேரளாவின் எர்ணாகுளத்துக்கு வாடகை காரில் கொள்ளையர்கள் தப்பி சென்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. பாஸ்டேக் விவரங்கள் மூலம்காரின் உரிமையாளரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அவர் போலீஸில் அளித்த வாக்குமூலத்தில், “ஒன்றரை மாதங்கள் கழித்தே காரை திரும்ப ஒப்படைத்தனர்” என்று தெரிவித்தார். அவர் அளித்த தகவல்களின்பேரில் கொள்ளையர்களை போலீஸார் கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து பெங்களூரு ஊரகப் பகுதி எஸ்.பி. வம்சி கிருஷ்ணா நிருபர்களிடம் கூறியதாவது:

பாஸ்டேக் மூலம் வழக்கில் துப்பு துலக்கி 10 பேரை கைது செய்துள்ளோம். இவர்களிடம் இருந்து ரூ.9.7 லட்சமும் 2 கார்களையும் பறிமுதல் செய்துள்ளோம். கேரளாவை சேர்ந்த இவர்கள், ஹவாலா பணத்தை கடத்துவோர், பெரும் தொழிலதிபர்களை குறிவைத்து பணத்தை கொள்ளையடித்து வந்துள்ளனர். கொள்ளை கும்பலின் தலைவன் ஸ்ரீதரன் தலைமறைவாக உள்ளார். அவரை தீவிரமாக தேடி வருகிறோம். கர்நாடகா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஸ்ரீதரன் மீது 16-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

கடந்த 2009-ம் ஆண்டில் கர்நாடக போலீஸார், அவரை கைது செய்தனர். அதன்பிறகு அவர் போலீஸ் பிடியில் சிக்கவில்லை. பிடிபட்ட கொள்ளையர்களிடம் இருந்து ரூ.9.7 லட்சம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணம் ஸ்ரீதரனிடம் உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.