பேரறிவாளனை ஏன் விடுவிக்க கூடாது?- உச்சநீதிமன்றம் கேள்வி

புது டெல்லி:
பேரறிவாளனை ஏன் விடுவிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 
முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிபிஐ சிறப்பு புலனாய்வுக் குழுவால் பேரறிவாளன் கடந்த 1991 ஜூன் 11-இல் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தினால் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை கடந்த 2014 பிப்ரவரி 14-ஆம் தேதி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 2017-ஆம் ஆண்டுக்கு பின் பேரறிவாளனுக்கு அவ்வபோது பரோல் வழங்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த மார்ச் 9-ம் தேதி பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவு சிறை அதிகாரிகளுக்கு கிடைக்காததால் பேரறிவாளன் பரோலில் தொடா்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 
இதன்பின், உச்சநீதிமன்ற உத்தரவு, புழல் சிறைத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்ததை அடுத்து பேரறிவாளன் ஜோலாா்பேட்டையில் இருந்து செவ்வாய்க்கிழமை புழல் சிறைக்கு அழைத்து வரப்பட்டாா். பல்வேறு சட்ட நடைமுறைகளுக்கு பின்னா் பேரறிவாளன் பிணையில் விடுவிக்கப்பட்டாா்.
இந்நிலையில், தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் பேரறிவாளன் தரப்பில் ‘விடுதலை அளிக்கக்கோரி அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின்பும் ஆளுநர் எந்தவிதமான முடிவையும் எடுக்காமல் உள்ளார்’ என வாதிட்டப்பட்டது.
இதுகுறித்து உச்சநீதிமன்றம் கூறியதாவது:-
பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் செயல். ஆளுநர் உத்தரவுக்காக எத்தனை முறை வழக்கை ஒத்திவைப்பது. மாநில அமைச்சரவையின் முடிவு ஆளுநருக்கு மகிழ்ச்சி தரவில்லை என்றால், அதனை ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துவிடுவாரா?
பேரறிவாளன் உட்பட 7 பேரை யார் விடுவிப்பது என்பதில் குழப்பம் நீடிக்கும் நிலையில் அவர் ஏன் சிரையில் இருக்க வேண்டும்? பேரறிவாளனை ஏன் நீதிமன்றமே விடுவிக்கக் கூடாது? பேரறிவாளனை விடுவிப்பதே ஒரே தீர்வு.
இவ்வாறு மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.