புதுடெல்லி: மத்திய பெட்ரோலியத் துறை முன்னாள் செயலாளர் தருண் கபூர் பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசகராக நேற்று நியமனம் செய்யப்பட்டார். இவர் பொறுப்பேற்கும் நாள் முதல் 2 ஆண்டுகள் பதவியில் இருப்பார்.
கடந்த 1987-ம் ஆண்டு இமாச்சல பிரதேச பிரிவிலிருந்து ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வானவர் தருண் கபூர். பல்வேறு பதவிகளை வகித்த இவர் கடைசியாக மத்திய பெட்ரோலியத் துறை செயலாளர் பணியிலிருந்து கடந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசகராக தருண் கபூர் திங்கள்கிழமை நியமனம் செய்யப்பட்டார். முன்னதாக, இவரது நியமனத்துக்கு மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்தது.
பணியில் சேர்ந்தது முதல் 2 ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிப்பார். இவருக்கு மத்திய அரசுத் துறை செயலாளருக்கு இணையான அந்தஸ்து மற்றும் சம்பளம் வழங்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுபோல ஹரி ரஞ்சன் ராவ் மற்றும் ஆதிஷ் சந்திரா ஆகியோர் பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் செயலாளர்களாக நியமிக்கப்பட் டுள்ளனர். 1994-ல் மத்திய பிரதேச பிரிவிலிருந்து ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வான ஹரி ரஞ்சன் ராவ், தொலைத்தொடர்புத் துறையில் பணிபுரிந்து வருகிறார்.
1994-ல் பிஹாரிலிருந்து தேர்வான ஆதிஷ் சந்திரா, இந்தியஉணவுக் கழகத்தின் தலைவர்மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.