முஸ்லிம் மதத்தில் இருந்து வெளியேறிய இளைஞர் மீது குடும்பத்தினர் தாக்குதல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்கர் அலி(24). இவர் கேரளத்தில் உள்ள இஸ்லாமிய மையம் ஒன்றில் மதம் சார்ந்த 12 வருட படிப்பு பயின்றார். பின்னர் முஸ்லிம் மதத்தில் இருந்தும் வெளியேறும் முடிவை எடுத்தார்.

முற்போக்கு சிந்தனையுடன் இயங்கத் தொடங்கிய அஸ்கர் அலியை, கொல்லத்தில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பேச, முற்போக்கு சிந்தனைவாத அமைப்பு அழைப்புவிடுத்தது. அங்கு பேச செல்லக்கூடாது என அஸ்கர் அலியை அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் தடுத்தனர். அதையும் மீறி அஸ்கர் அலி செல்லவே, அவரது குடும்பத்தினரும், பகுதிவாசிகளும் கொல்லம் சென்றனர்.

போலீஸார் மீட்பு

அஸ்கர் அலி தங்கியிருந்த விடுதிக்குச் சென்றவர்கள், அவரை கொல்லம் கடற்கரைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்த காரில் ஏறச் சொல்லி கட்டாயப்படுத்தினர். அதில் வேறு சிலர் இருந்தனர். காரில் ஏற மறுத்ததால், அஸ்கர் அலி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவரது அழுகை சத்தம் கேட்டு கடற்கரையில் கூட்டம் கூடியதால் போலீஸார் வந்து அவரை மீட்டனர்.

8 முதல் 10 வயது வரை

இதுகுறித்து அஸ்கர் அலி கூறியதாவது: என்னை என் குடும்பத்தினரும், வேறு சிலரும் தாக்கியது தொடர்பாக கொல்லம் கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மதக்கல்வி படிப்பிற்கு 8 முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகள் சேர்கிறார்கள். 12 ஆண்டு படிப்பு அது. அவர்கள் அனுபவிக்கும் உளவியல் மற்றும் உடல் ரீதியான பிரச்சினைகள் குறித்து வெளியில் சொல்ல முடிவதில்லை. குடும்பத்தில் போய் சொன்னாலும், மதமே பிரதானமாக நம்பும் குடும்பங்கள் அதை உணர்ந்து கொள்வதில்லை.

மத வகுப்பறையில் ராணுவத்தில் சேரக் கூடாது என கற்றுத் தரப்படுகிறது. ராணுவத்தில் சேர்ந்தால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாட்டினர் மீது தாக்குதல் நடத்த வேண்டி வரும். அவர்கள் நம்மதத்தைச் சேர்ந்தவர்கள். ஒருமுஸ்லிம், இன்னொரு முஸ்லிமை கொல்லக் கூடாது என போதிக்கப்பட்டது. உண்மையான பாசிசமே இஸ்லாம்தான் என கொல்லம்கூட்டத்தில் பேசினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.