ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற முடியும் என அஸ்வின் நிரூபித்துள்ளார்: முன்னாள் கேப்டன் புகழாரம்

மும்பை: நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி ஆல்ரவுண்டராக தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடி வருகிறார். இந்தியாவின் சுழற்பந்துவீச்சு நாயகனாக மிளிரும் அஸ்வின் இந்த ஐபிஎல் தொடரில் 3, 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கி பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடியுள்ளார். குறிப்பாக சென்னை அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் 23 பந்தில் 43 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் சாதித்து வரும் அஸ்வின் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பாராட்டி பேசியுள்ளார்.அஸ்வின் குறித்து கவாஸ்கர் கூறியதாவது: அஸ்வின் ஒரு தொடக்க பேட்ஸ்மேனாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தற்போது அவர் ஒரு சிறந்த சுழற்பந்து வீரராகவும் உள்ளார். எந்த வரிசையிலும் தன்னால் சிறப்பாக ஆட முடியும் என்பதை அஸ்வின் நிரூபித்து உள்ளார். எந்த வரிசையில் எப்படி ஆட வேண்டும் என்பதை அஸ்வின் நன்றாக தெரிந்து வைத்துள்ளார். மேலும் அவர் ஐந்து டெஸ்ட் சதங்களைப் அடித்துள்ளார். அதனால் அவர் பேட்டிங் செய்ய முடியும், அது அவருக்குத் தெரியும். அந்த பேட்டிங்கை ‘அல்ட்ரா ஷார்ட் ஃபார்மேட்டில்’ செய்து, ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற  முடியும் என்று அஸ்வின் நிரூபித்துள்ளார். அதுவே அவரது குறிக்கோள், அதனால்தான் அவர் தனது சொந்த பேட்டிங் செயல்திறனைப் பற்றி மிகவும் உற்சாகமாக இருக்கிறார் என கவாஸ்கர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.