சிறுமி காரில் கடத்தி பலாத்காரம்- தெலுங்கானா அமைச்சர், எம்.எல்.ஏ. மகன்கள் கோவா தப்பி ஓட்டம்

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவருடன் படிக்கும் தோழிக்கு கடந்த மாதம் 25-ந் தேதி ஐதராபாத், ஜூப்ளி ஹில்ஸ் பகுதியிலுள்ள சொகுசு ஓட்டலில் பிறந்தநாள் கொண்டாடினர்.

இதில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 80 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறந்தநாள் விழா முடிந்து சிறுமி படிக்கட்டு வழியாக வெளியே வந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல் சிறுமியை தூக்கி காரில் கடத்திச் சென்றனர்.

சிறுமி தன்னை விட்டுவிடும்படி கும்பலிடம் மன்றாடினார். ஆனாலும் அவர்கள் வலுக்கட்டாயமாக சிறுமியை காரில் வைத்தே 5 பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

சுமார் 2 மணி நேரம் கழித்து மீண்டும் சிறுமியை கொண்டு வந்து சொகுசு ஓட்டலுக்கு வெளியே காரில் இருந்து தள்ளிவிட்டு தப்பிச் சென்றனர். அங்கிருந்து சிறுமி வீடு திரும்பினார். பிறந்தநாள் விழாவுக்கு சென்ற மகள் கழுத்தில் காயங்களுடன், சோர்வாக வீட்டிற்கு வந்ததைக் கண்ட அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது நடந்த சம்பவம் குறித்து கூறினார். சிறுமியின் பெற்றோர் இது குறித்து ஜூபிலி ஹில்ஸ் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டலுக்கு வெளியே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது தெலுங்கானா மாநில உள்துறை அமைச்சர் முகமது அலி மகன், ஐ.எம்.ஐ ஒவைசி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ மகன், தெலுங்கானா மாநில வஃக்போர்டு தலைவரின் மகன் உட்பட 5 பேர் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இவர்கள் தவிர பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 16 வயது சிறுவன் மற்றும் சகாபுதீன் மாலிக் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பலாத்கார வழக்கில் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. மகன்கள் சம்பந்தப்பட்டு இருப்பதால் போலீசார் அவர்களை கைது செய்வதில் மெத்தனமாக நடந்து கொள்வதாக பல்வேறு அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டினர்.

பலாத்கார வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யவேண்டும் என பா.ஜ.க. சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து தலைமறைவாக உள்ள அமைச்சர், எம்.எல்.ஏ மகன்களை தேடி வருகின்றனர். அவர்களின் செல்போன்களை ஆய்வு செய்ததில் அவர்கள் கோவா தப்பி சென்றது தெரியவந்தது. அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் கோவா விரைந்துள்ளனர்.

தெலுங்கானா பா.ஜ.க. மாநிலத்தலைவர் பண்டி சஞ்சய் தலைமறைவாக உள்ளவர்களை தப்ப வைக்க போலீசார் முயற்சி செய்வதாக குற்றம்சாட்டி உள்ளார். அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என போராட்டம் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் தெலுங்கானா அரசியல் வட்டாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.