சிட்னி:’அனைத்து ஊழியர்களும் குறைந்தபட்சம், வாரத்தில், 40 மணி நேரம் அலுவலகத்தில் இருக்க வேண்டும்; அவ்வாறு வராதவர்கள் ராஜினாமா செய்ததாக கருதப்படுவர்’ என, உலகின் மிகப் பெரும் பணக்கார தொழிலதிபரான எலன் மஸ்க் கூறியுள்ளார்.
அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும், ‘டெஸ்லா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளவர் எலன் மஸ்க். இவர் சமீபத்தில் தன் ஊழியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், ‘டெஸ்லா ஊழியர்கள், வாரத்தில் குறைந்தபட்சம், 40 மணி நேரம் அலுவலகத்தில் இருக்க வேண்டும். அவ்வாறு வராதவர்கள், தங்களுடைய பதவியை ராஜினாமா செய்ததாக கருதப்படுவர்’ என, குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று பரவல் முழுமையாக குறையாத நிலையில், அலுவலகத்துக்கு வருவதை கட்டாயப்படுத்துவதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் மூன்றாவது பெரும் பணக்காரரான, தொழிலதிபர் ஸ்காட் பர்குஹார், இதைக் கிண்டல் செய்து சமூக வலை தளத்தில் பதிவிட்டார். ‘வீட்டில் இருந்து வேலை பார்ப்பதே, எங்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம். டெஸ்லா ஊழியர்களை வரவேற்கிறேன்’ என, அவர் குறிப்பிட்டிருந்தார்.
Advertisement