பிராட்வே பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு: தலைமைச்செயலாளர், மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் உள்பட முக்கிய பகுதிகளில் அமைந்துள்ள பிராட்வே பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றப்படாதது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம்,  தலைமைச்செயலாளர், மாநகராட்சி ஆணையருக்கு கடும் எச்சரிக்கை செய்துள்ளது.

பிராட்வே பகுதியின் முக்கிய சாலையான, என்எஸ்சி போஸ் சாலை ஆக்கிரமிப்பை அகற்றாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணையின்போது, சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க சென்னை மாநகராட்சி தரப்பில் மேலும் 2 மாதம் அவகாசம் கோரப்பட்டது. இதனால், கோபமடைந்த நீதிபதிகள்,  சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் தலைமை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மறைந்த டிராபிக் ராமசாமி கடந்த சில வருடங்களுக்கு முன்பே பிராட்வே பகுதி என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள நடை பாதையை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதாக கூறி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டிருந்தது.  இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் டிராபிக் ராமசாமி 2016ஆம் ஆண்டில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை  விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்றிடம் வழங்க அவகாசம் வழங்கி கடந்த ஏப்ரல் மாதம் உத்தர விட்டிருந்தது.

இந்த வழக்கு, இன்று (11-6-2022) சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி  என்.மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகஅரசு மற்றும் மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  சாலையோர வியாபாரிகளுக்கு மாற்றிடம் வழங்க இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஏற்கனவே போதிய அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், மீண்டும் அவகாசம் கேட்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து ஜூன் 23ஆம் தேதிக்குள் மாற்றிடம் வழங்கி ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், அவமதிப்பு வழக்கு பதிவு செய்யும்போது பணியில் இருந்த தலைமை செயலாளர் ஞானதேசிகன், சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், சென்னை மாநகர காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளும் அதே பொறுப்பில் தற்போது இருப்பவர்களும் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜுன் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.