திருமணத்தை மீறிய உறவு… தட்டிக்கேட்ட மனைவிக்கு குழந்தைகள் கண்முன்னே நேர்ந்த பரிதாபம்

திருமணத்தை மீறிய உறவில் கணவர் ஈடுபட்டதால், தட்டி கேட்ட மனைவியை குழந்தைகள் கண்முன்னே கொலை செய்த கணவனை போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா முதனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த யோகிதாவிற்கும், ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கெண்டேஹோசஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரவி கவுடா என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ரவி கவுடா மற்றும் யோகிதாவின் குடும்ப வாழ்க்கை 2-3 ஆண்டுகள் நன்றாக சென்றுகொண்டிருந்திருக்கிறது. பின்னர் இந்த தம்பதியருக்கு பெண் மற்றும் ஆண் என இரு குழந்தைகள் பிறந்துள்ளது.
திருமணமான சில வருடங்களிலேயே ரவி கவுடா பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்துள்ளார். இந்த விஷயம் தெரிந்ததும் ரவி கவுடாவிடம் யோகிதா கேட்டுள்ளார். இதனால் குடும்பத்தில் புயலைக் கிளப்பிய ரவி கவுடா, தினமும் யோகிதாவை திட்டுவதையும், அடிப்பதையும் வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.
image
இதற்கிடையில், யோகிதா தனது கணவரை கையும் களவுமாக பிடித்து தந்தை வீட்டில் கூறியுள்ளார். அப்போது பெரியவர்கள் பஞ்சாயத்து செய்து நன்றாக இருக்க வேண்டும் என சமாதானப்படுத்தி இருக்கின்றனர். அப்போதும் ரவி கவுடா திருமணத்தை மீறிய உறவை தொடர்ந்ததுடன், யோகிதாவை சித்ரவதை செய்தும் வந்துள்ளார்.
இந்நிலையில் ரவி கவுடா நேற்று முன்தினம் குழந்தைகளுக்கு பானிபூரி வாங்கி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த நேரத்தில், யோகிதா குழந்தைகளை சாப்பிட வேண்டாம் என்று கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ரவி கவுடா, யோகிதாவின் தலைமுடியைப் பிடித்து வீட்டிற்குள் இழுத்துச் சென்றிருக்கிறார்.
image
பிறகு வீட்டில் இருந்த கம்பியை எடுத்து யோகிதாவின் கழுத்தில் அடித்து கொலை செய்திருக்கிறார். கொலை செய்துவிட்டு வெளியே வந்த ரவி கவுடா நடந்த அனைத்து சம்பவங்களையும் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்த குழந்தைகளிடம், ’’என்னை போலீஸ் கைது செய்துவிடும், யாரிடமும் சொல்ல வேண்டாம்’’ என்று கூறிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து அரகெரே காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடிவந்த நிலையில், தன்னுடன் திருமணத்தை மீறிய உறவிலிருந்த பெண்ணின் வீட்டில் பதுங்கி இருந்த ரவி கவுடாவை போலீசார் பிடித்து கைதுசெய்து கொலை குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.