ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு

திருவனந்தபுரம்: ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (16ம் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறப்பார். இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. நாளை முதல் 21ம் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் உஷபூஜை, கணபதி ஹோமம் உள்பட வழக்கமான பூஜைகளுடன், படி பூஜை உதயாஸ்தமன பூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.தினமும் காலையில் நெய்யபிஷேகமும் நடத்தப்படும். 21ம் தேதி இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் ஆடி மாத பூஜைகள் நிறைவடையும். தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கியது. நிலக்கல்லில் உடனடி முன்பதிவு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.