ஜூலை மாதத்தில் ரூ.100 கோடியை தாண்டிய திருப்பதி உண்டியல் காணிக்கை

திருமலை: ஜூலை மாதம் முடிவடைய இன்னமும் ஒரு வாரம் இருக்கும் நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இம்மாத உண்டியல் காணிக்கை ரூ. 100 கோடியை கடந்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு உள்நாடு மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த 4 மாதங்களாக பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் உண்டியல் காணிக்கை அதிகமாகி உள்ளது. கரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக ஏழுமலையானின் உண்டியல் காணிக்கை மிகவும் குறைந்து விட்டது.

ஆனால், தற்போது ஒவ்வொரு மாதமும் ரூ.100 கோடியை கடந்து உண்டியல் மூலம் தேவஸ்தானத்திற்கு காணிக்கை கிடைத்து வருகிறது. தற்போது, பழையபடி சர்வ தரிசனம் உட்பட ரூ.300 சிறப்புதரிசனம், ஆர்ஜித சேவைகள், விஐபி பிரேக் தரிசனங்கள், ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் தரிசனம் என அனைத்து விதத்திலும் பக்தர்கள் சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததால், உண்டியல் காணிக்கையும் அதிகரித்துள்ளது.

ரூ.150 கோடியை தொடும்

கடந்த 4 மாதங்களாக உண்டியல் காணிக்கை ரூ.100 கோடியை தாண்டிய நிலையில், இம்மாதம் கடந்த 21-ம் தேதியே உண்டியல் காணிக்கை ரூ.100 கோடியே 75 லட்சமாக பதிவானது. மேலும் இம்மாதம் 31-ம் தேதிக்குள் மேலும் ரூ. 40 முதல் 45 கோடி வரை உண்டியல் மூலம் காணிக்கை வரும் என கருதப்படுகிறது. அதன்படி இந்த மாதம் எப்போதும் இல்லாத வகையில் உண்டியல் காணிக்கை ரூ.150 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.