புதுடெல்லி: நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று நடக்கும் விழாவில் 21 குண்டுகள் முழங்க நாட்டின் 15வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்கிறார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். ஜனாதிபதியாக இருந்த ராம்நாத் கோவிந்த் நேற்றுடன் ஓய்வு பெற்றதை அடுத்து, நாட்டின் 15வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்தது. பாஜ கூட்டணி வேட்பாளராக பழங்குடியின பெண்ணான திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக யஷ்வந்த சின்கா போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 21ம் தேதி எண்ணப்பட்டன. இதில், திரவுபதி முர்மு 6,76,803 வாக்கு மதிப்புகளும் (64%), யஷ்வந்த் சின்கா 3,80,177 வாக்கு மதிப்புகளும் பெற்றனர். இதன் மூலம், 2,96,626 வாக்குகள் வித்தியாசத்தில் திரவுபதி முர்மு வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் நாட்டின் முதல் பழங்குடியின ஜனாதிபதி, 2வது பெண் ஜனாதிபதி, மிக குறைந்த வயது ஜனாதிபதி என்ற பெருமைகளை அவர் பெற்றுள்ளார். இந்நிலையில், முர்முவின் பதவியேற்பு விழா நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று நடக்கிறது. காலை 10.15 மணிக்கு நடக்கும் இந்த விழாவில் நாட்டின் 15வது ஜனாதிபதியாக அவர் பதவியேற்க உள்ளார். இதற்காக முர்முவும், ராம்நாத் கோவிந்தும் முப்படைகளின் அணிவகுப்புடன் ஜனாதிபதி மாளிகையில் இருந்து நாடாளுமன்றத்துக்கு வருகின்றனர். பின்னர், முர்முவுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். அப்போது, ஜனாதிபதி பதவி என்பது நாட்டு அரசியலமைப்பின் உச்சபட்ச பதவி என்பதால், முர்மு பதவியேற்கும் போது 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்படும். பின்னர், ஜனாதிபதியாக நாட்டு மக்களுக்கு முர்மு உரையாற்றுவார். இவ்விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ஒன்றிய அமைச்சர்கள், ஆளுநர்கள், மாநில முதல்வர்கள், பல்வேறு நாட்டு தூதர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், காவல், ராணுவ அதிகாரிகள் என பலர் பங்கேற்க உள்ளனர். பதவியேற்பு விழாவுக்கு பின், ஜனாதிபதி முர்மு ஜனாதிபதி மாளிகைக்கு செல்வார். அங்கு அவருக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்படும். அங்கு ராம்நாத் கோவித்துக்கும் மரியாதை அளிக்கப்பட்டு, வழியனுப்பி வைக்கப்பட உள்ளார்.
