புதுடெல்லி: நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு (64) இன்று பதவி ஏற்கிறார்.
கடந்த 18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள் வாக்களித்தனர். கடந்த 21-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 64 சதவீத வாக்குகளுடன் திரவுபதி முர்மு அமோக வெற்றி பெற்றார். யஷ்வந்த் சின்ஹாவுக்கு 36 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
கடந்த 2017-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவர்ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு இன்று பதவியேற்கிறார்.
பலத்த பாதுகாப்பு
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இதையொட்டி, நாடாளுமன்ற வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள 30 அரசு அலுவலகங்களையும் இன்று காலை 6 மணிக்கு பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டு, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
புதிய நாடாளுமன்ற வளாககட்டுமானப் பணியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு கருதி, கட்டுமானப் பணிகளை இன்று நிறுத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது.
நாடாளுமன்ற வளாகத்தில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்களும் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
21 குண்டுகள் முழங்க மரியாதை
பாரம்பரிய நடைமுறைகளுக்குப் பிறகு, காலை 10.05 மணிக்கு குடியரசுத் தலைவர்ராம்நாத் கோவிந்தும், குடியரசுதலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரவுபதி முர்முவும் அணிவகுப்பு மரியாதையுடன் நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு வருவார்கள்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், எம்.பி.க்கள், பல்வேறு நாடுகளின் தூதர்கள், ராணுவ தளபதிகள் விழாவில் பங்கேற்பார்கள்.
காலை 10.15 மணிக்கு புதிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்துவைப்பார். இதன் பிறகு 21 குண்டுகள் முழங்க புதியகுடியரசுத் தலைவருக்கு மரியாதை செலுத்தப்படும். தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் புதிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுவார். இதன் ஆங்கில உரையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வாசிக்கிறார்.
பின்னர், திரவுபதி முர்முவும், ராம்நாத் கோவிந்தும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு செல்வார்கள். அங்கு திரவுபதி முர்மு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். தொடர்ந்து, அதிகாரபூர்வமாக குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர் குடியேற உள்ளார்.