மாநிலங்களவையில் அமளி: திமுக எம்பிக்கள் உட்பட 11 பேர் சஸ்பெண்ட்!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட திமுக எம்பிக்கள் உட்பட 19 பேரை இந்த வாரம் முழுவதும் சஸ்பெண்ட் செய்து, மாநிலங்களவை தலைவர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்பி விவாதம் நடத்த வேண்டும் என தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்; பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு விவகாரங்களை வலியுறுத்தி, நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இதனால் இரண்டு அவைகளிலுமே அலுவல்கள் பாதிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று, வழக்கம் போல் நாடாளுமன்ற மாநிலங்களவை கூடியது. அப்போது திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள், எழுந்து நின்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும், மாநிலங்களவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, மாநிலங்களவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய காரணத்தால், திமுக எம்.பி.க்கள் என்.ஆர்.இளங்கோ, அப்துல்லா, சண்முகம், கிரிராஜன், கனிமொழி சோமு உள்பட 19 எம்.பி.க்கள் இந்த வாரம் முழுவதும் அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக, மாநிலங்களவைத் தலைவர் உத்தரவிட்டு உள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் அமளியில் ஈடுபட்டதாகக் கூறி, காங்கிரஸ் எம்பிக்கள் 4 பேர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், இன்று, மாநிலங்களவையைச் சேர்ந்த திமுக எம்பிக்கள் 6 பேர் உட்பட 19 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.